தமிழகத்தில் 5 மணி நேரம் மட்டுமே பெட்ரோல், டீசல் விற்க கட்டுப்பாடு வருமா? பெட்ரோல் விற்பனையாளர்கள்
சென்னை: தமிழகத்தில் 5 மணி நேரம் மட்டுமே பெட்ரோல், டீசல் விற்க கட்டுப்பாடு தேவை என தமிழ்நாடு பெட்ரோல் விநியோகர் சங்க தலைவர் முரளி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகாமல் இருக்க வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மிக அவசர தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சர்வ சாதாரணமாக உலாவி வருகிறார்கள்.
தண்டனை அளிக்கும் போலீஸ்
பலர் காரண காரியங்கள் இன்றி இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் சுற்றுகிறார்கள். இவர்களை காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வருகிறார்கள். தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் வீட்டை விட்டு வெளியே வந்து பைக்கில் சுற்றும் வாலிபர்களை போலீசார் அடித்து தண்டனை கொடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
பாயும் வழக்குகள்
இதனிடையே தமிழகத்திலும் வீட்டை விட்டு வெளியேறி தேவையின்றி சுற்றுவோர் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். 1000 பேருக்கு மேல் நேற்று வழக்குகள் பாய்ந்துள்ளது. எனினும் வெளியில் வாகனத்தில் சுற்றுவது அதிகமாகவே உள்ளது. இதேபோல் அரசின் உத்தரவை மதிக்கமால் மொத்தம் மொத்தமாக மக்கள் கடைகளில் குவிந்து வாங்குவதும் அதிகமாக உள்ளது.
பெட்ரோல் விற்னை
இந்நிலையில் மக்கள் வெளியில் சுற்றுவதை தடுக்க தமிழகத்தில் 5 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் டீசல் விற்பனை என்ற கட்டுப்பாடு தேவை என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு பெட்ரோல் விநியோகர் சங்க தலைவர் முரளி, பெட்ரோல் விற்பனை காலை 9 மணி முதல் 2 மணி வரை மட்டுமே விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அவசர தேவைக்கு மட்டும்
அரசு வரையறுத்த பால், காய்றிகள், அவசர ஊர்திகள் மற்றும் அவசர தேவைகள், மற்றும் அரசின் வாகங்களுக்கு மட்டும் 24 மணி நேரம் பெட்ரோல் டீசல் விற்பனை செய்ய தாங்கள் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஊரடங்கை பின்பற்றாமல் கண்டபடி இருசக்கர வாகனங்களில் மக்கள் வருகிறார்கள் என்றும் இதற்கு கட்டுப்பாடு தேவை என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.