தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமனம்
சென்னை: தமிழக லோக் ஆயுக்தாவுக்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் தலைமையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்பான லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் காரணமாக, 2018ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி தமிழக சட்டபேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆனால் பலமுறை உச்ச நீதிமன்றம் அவகாசம் கொடுத்தும் லோக் ஆயுக்தாவுக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் தமிழக அரசு இருந்து வந்தது. இந்நிலையில் இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம், 11ம் தேதி நடந்த விசாரணையில், 16 வார காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைப்பில் உறுப்பினர்களை நியமித்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த 13ம் தேதி உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியை முடித்தது. இப்போது தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் உறுப்பினர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
என் பிணத்தின் மீது ஏறிப் போய் ஸ்டெர்லைட்டை திறந்துக்கங்க.. நாம் தமிழர் வேட்பாளர் ஆவேசம்
அதன் படி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் லோக் ஆயுக்தா நடுவராகவும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை நீதித்துறை உறுப்பினர்களாகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோரை உறுப்பினர்களாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக லோக் ஆயுக்தா இந்த வாரத்திலேயே செயல்பட ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.