நாடு முடங்கினால்... ஜி.டி.பி.சரியத்தான் செய்யும்... இதில் என்ன வியப்பு... பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்
சென்னை: இந்தியாவின் ஜி.டி.பி. விகிதம் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளதால் தொழிலதிபர்கள் முதல் பி.ஏ. எக்னாமிக்ஸ் மாணவர்கள் வரை அதைப் பற்றி தான் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமது கருத்தை ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்ட பொருளாதார அறிஞரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான ஜெயரஞ்சன், ஜி.டி.பி. சரிவுக்கான காரணங்களை விளக்கினார்.
மேலும், வருடத்தில் மூன்றில் ஒரு பங்கு நாட்டில் எந்த உற்பத்தியும் நடைபெறாத போது ஜி.டி.பி குறையத்தான் செய்யும் எனத் தெரிவித்தார்.
அதல பாதாளத்திற்கு போன ஜிடிபி... அப்போ ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி அரோகராவா?
ஜி.டி.பி விளக்கம்
ஜி.டி.பி. என்பதன் விரிவாக்கம் (Gross Domestic Product) அதாவது நாட்டின் மொத்த உள் உற்பத்தியை குறிப்பதாகும். நாட்டின் முன்னேற்றம் குறித்து அளவிடும் கருவியாக ஜி.டி.பி கருதப்படுகிறது. இதை அளவிடும் முறையானது மிகவும் சவாலானது. காரணம் புள்ளி விவரங்கள் மற்றும் தகவல் தரவுகளை சேமிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளன. இருப்பினும் உற்பத்தி, வருவாய் உள்ளிட்ட பல வழிமுறைகளில் ஜி.டி.பி கணக்கீடு செய்யப்படுகிறது.
பொருளாதார அறிஞர்
இந்நிலையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான முதல் காலாண்டு ஜி.டி.பி. விகிதம் 23.9 % ஆக சரிந்தது பற்றி பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனை ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது; ''ஒரு நாட்டின் வளர்ச்சியை குறிப்பதில் ஜி.டி.பி. விகிதம் மிகவும் இன்றியமையாதது. நாடு வளர்ச்சி அடைகிறதா தேய்ந்து செல்கிறதா என்பதை அறிய இந்த ஜி.டி.பி. மிக முக்கியமானது.''
பொருளாதாரம்
''வருடத்தில் மூன்றில் ஒரு பங்கு அதாவது நூறு நாட்களுக்கு மேல் அனைத்தையும் முடக்கிப்போட்டுவிட்டது அரசு. பிறகு எப்படி ஜி.டி.பி. வளர்ச்சியை நீங்கள் எதிர்பார்க்க முடியும். நாடே பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஜி.டி.பி. குறைவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நாடு இது வரை சந்திக்காத ஒரு பிரச்சனை தான், ஆனால் அதற்கு என்ன செய்ய முடியும். முதலில் கொரோனாவில் இருந்து வெளிவர வேண்டுமே, முதலில் 10 நாட்கள் என்றார்கள் ஒரு மாதம் என்றார்கள் இப்போது 6 மாதம் ஆகிவிட்டது.''
யூகிக்க முடியாது
''பொருளாதார நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இப்போது கண்களை கட்டி காட்டில் விட்ட கதை தான், அதனால் இப்போது எதையும் யூகிக்கவும் முடியாது, ஜி.டி.பி. வளர்ச்சிக்கான வழியையும் ஆராய முடியாது. ஒரு நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், இது எதில் போய் முடியும் என எனக்குத் தெரியவில்லை.'' இவ்வாறு ஓய்வு பெற்ற பொருளாதாரத்துறை பேராசிரியர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்.