அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையா?... அமைச்சர் செங்கோட்டையன் பதில் இதுதான்
சென்னை: அதிமுகவின் இரட்டைத் தலைமை முறையால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியிருப்பதற்கு, அறைக்கும் அமர்ந்து பேச வேண்டிய விவகாரங்களை வெளியில் பேசுவதால், கட்சிக்குள் தேவையில்லா கலகம் தான் ஏற்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கருத்து கூறியுள்ளார்.
உட்கட்சி பூசல் இருந்தாலும், 2 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தொடரும் எனக் கூறியுள்ள அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா, அதிமுகவில் இருவர் தலைவராக இருப்பதால் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது. ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சியை கொண்டு வர பொதுக்குழுவை உடனடியாக கூட்டி பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ள கருத்து, அதிமுகவுக்குள் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் கோஷ்டிப் பூசல் ஏதும் இல்லை என்றும்,அதிமுகவில் தலைவர் பதவி என்ற சொல்லுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ராஜன் செல்லப்பா கருத்து பற்றி கேட்கப்பட்டது. அறைக்குள் பேசி விவாதிக்க வேண்டிய கருத்துகளை, வெளியில் பேசுவது நல்லதல்ல என்றும், அந்த போக்கு தொடர்ந்தால், அது கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தும் என்றும் செங்கோட்டையன் பதிலளித்தார்.
மேலும், மாணவர்களிடன் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்காக 412 மையங்களில் நீட் தேர்விற்காக பயிற்சி அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். தனியார் பயிற்சி மையங்களை விட அரசு மையங்கள் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த ஆண்டை விட நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் 48.57 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
சென்னைக்கு முக்கிய தகவல்.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
இதற்கிடையே, அதிமுகவில் ஒரே தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது பற்றி கருத்து தெரிவித்தால் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிடும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதே நேரம், இரட்டை தலைமையில் அதிமுக ஆளுமையுடன் உள்ளது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த, இடைத்தேர்தலில் வென்ற 9 எம்எல்ஏக்களை தடுத்ததாக கூறுவது பொய்யானது என்றும் தெரிவித்தார்.