மாவட்டங்களில் மீண்டும் விஸ்வரூபம் காட்டும் கொரோனா- வேலூரில் 103; மதுரையில் 58; கோவையில் 29
சென்னை: தமிழகத்தில் வேலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உக்கிரமடைந்தது. கொரோனா மரணங்களும் கோர தாண்டவமாடியது.
தமிழகத்தில் 3-வது நாளாக 2,000-த்தை தாண்டியது- ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா - 41 பேர் மரணம்
சென்னைவாசிகள் படையெடுப்பு
இதனால் இந்த மாவடங்களில் ஜூன் 30-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் கடந்த காலங்களைப் போல இல்லாமல் கடுமையாக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் திரும்பிவிட்டனர்.
வேலூரில் 103 பேருக்கு பாதிப்பு
இந்த நிலையில் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்று மிக அதிகமாக உள்ளது. நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வேலூரில்தான் மிக அதிகபட்சமாக 103 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது. இதனயடுத்து வேலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை, திண்டுக்கல்லில் அதிகரிப்பு
வேலூரைத் தொடர்ந்து இன்று மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. மதுரையில் இன்று மட்டும் 58 பேருக்கு கொரோனா உறுதியானது. மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 550 ஆக உள்ளது. திண்டுக்கல்லில் இன்று 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 272.
கோவையில் 29 பேருக்கு கொரோனா
கோவையில் 24 மணிநேரத்தில் மொத்தம் 29 பேருக்கு கொரோனா உறுதியானது. கோவையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 244. திருவண்ணாமலையில் 37 பேருக்கு கொரோனா இன்று உறுதியானது. இதனால் இம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 853 ஆகவும் உயர்ந்திருக்கிறது.