நல்லா பாருங்க.. கபில் தேவ், கில்கிறிஸ்ட், ஜெயசூர்யா.. மொத்தமா கலந்து எடுத்தா.. அடடே, நம்ம டீம்!
சென்னை: "அப்பாடா.. முக்கால்வாசி டீம் முடிஞ்சி போச்சி, இனி ஆஸ்திரேலியா டீம் அவ்வளவுதான்" அப்படீன்னு எதிரணி நினைக்கும்போது, ஆயிரம் வாலா சரவெடியை கொளுத்தி போட்டதை போல, ஸ்கோர் போர்டில் நூறு, இருநூறு ரன்களை ஏற்றிவிட்டு போவார் கில்கிறிஸ்ட். ஆஸ்திரேலிய அணியின் கடைசி நேர சிக்சர் மன்னன்.
டெஸ்ட் போட்டியில், 7வதாக களமிறங்கியும், எதிரணியை மிரட்ட முடியும் என்பதற்கு கிரிக்கெட் உலகம் கண்ட சமீபத்திய உதாரணம்தான் இந்த விக்கெட்-கீப்பிங் பேட்ஸ்மேன்.
"பேட்டிங்கில்தான், அடித்து நொறுக்கிவிட்டீங்கல்ல.. பவுலிங்கும் போட வந்து ஏம்ப்பா எங்களை இப்படி படுத்துறீங்க" என்று இலங்கை காட்டடி மன்னன் சனத் ஜெயசூர்யாவிடம் எதிரணி வீரர்கள் கேட்டதாக செவி வழிச் செய்திகள் உண்டு.
டீம் இந்தியா சூப்பர் வெற்றி.. புஜாராவுக்கு ஷொட்டு.. பெயினுக்கு குட்டு.. தெறிக்க விடும் மீம்ஸ்!
கபில்தேவ் ஆட்டம்
அங்கே.. இங்கே.. ஏன் போவானேன்? உலகம் கண்ட சூப்பரான வேகப்பந்து ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கபில் தேவ் நம்மிடம் இருக்காரே. 1983ல் நடந்த, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியை மறக்க முடியுமா. முடிஞ்சி போச்சி என நினைத்தபோது, மொத்த டீமையும் ஒற்றையாளாக தூக்கி நிறுத்தி 175 ரன்கள் விளாசினாரே. அந்த இன்னிங்ஸ்தானே இந்தியாவை காப்பாற்றியது. இந்த, கேப்டன் ஸ்ப்ரிட்தானே, அப்போது, உலக கோப்பையை வெல்ல அச்சாரமானது.
அபார வீரர்கள்
இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்த பெஸ்ட் பிளேயர்களை, இப்போது, இந்தியாவின், பிளேயிங் லெவனில் பார்க்க முடிகிறது என்றால் நம்ப முடிகிறதா. ஆம்.. ரிஷப் பந்த்தின் இன்னிங்ஸ் கில்கிறிஸ்டையும், வாஷிங்டன் சுந்தர், ஜெயசூர்யாவையும், ஷர்துல் தாக்கூரின் இன்னிங்ஸ் கபில் தேவையும் நினைவூட்டுகிறது.
கில்கிறிஸ்ட் தம்பி
ரிஷப் பந்த் இடது கை பேட்ஸ்மேன் என்பதற்காகவும், விக்கெட் கீப்பர் என்பதற்காகவும் மட்டும் கில்கிறிஸ்டோடு ஒப்பிடப்படவில்லை. அவர் களமிறங்குவது 5வது இடத்தில். அணியின் தேவைக்கு ஏற்பவெல்லாம் மாறி மாறி ஆட வேண்டிய இடம் அது. கிட்டத்தட்ட கில்கிறிஸ்டும் அப்படித்தான். ஆனால் இருவருமே, களம் எப்படி இருந்தாலும், தங்கள் இயல்பான ஆட்டத்தைதான் ஆடுவார்கள். அதுதான் இருவருக்குமே சக்சஸை பெற்றுக் கொடுத்துள்ளது. இரு பேட்ஸ்மேன்களுமே எந்த பவுலராக இருந்தாலும் சிக்சரை நோக்கி பந்தை விரட்ட எத்தனிக்கிறார்கள். எனவேதான், ரிஷப் பந்த்துக்குள் ஒரு கில்கிறிஸ்ட் ஒழிந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
செம ஆல்ரவுண்டர்
பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அவர் பவுலர் என்ற வகையில் அது ஓகே. ஆனால் அணி தடுமாறியபோது வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து, பார்ட்னர்ஷிப் கொடுத்து கரையேற்ற உதவினார். 67 ரன்களை எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தார். தாக்கூரிடம் ஆஸி.வீரர்கள் மட்டுமல்ல, இந்திய ரசிகர்களே கூட இப்படி ஒரு சூப்பர் ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான, வேகப்பந்து ஆல்ரவுண்டர் கனவை தாக்கூர் நனவாக்கி, தனக்குள் உள்ள கபில்தேவை அடுத்தடுத்த போட்டிகளிலும் வெளியே கொண்டுவர வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
ஜெயசூர்யா ஸ்டைல்
ஸ்பின் பவுலிங், பேட்டிங் இரண்டிலும் ஜொலிக்கும் வாஷிங்டன் சுந்தர் சர்ப்ரைஸ் பேக்கேஜாக வந்து ஜெயசூர்யா போல ஸ்பின் ஆல்ரவுண்டராக ஜொலித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது ஃபுல் ஷாட் சிக்சரும், ஆப் சைடு டிரைவும், ஜெயசூர்யாவை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. பெரிதாக ஸ்பின் ஆகாவிட்டாலும் விக்கெட்டை வீழ்த்துவார் ஜெயசூர்யா. சுந்தரும் அதே ஸ்டைல் பவுலர்தான்.
ஜாம்பவான்கள்
இந்திய டீம் இளம் வீரர்களை வைத்து ஜெயித்துவிட்டதாக பெருமிதம் கொள்கிறோம். ஆனால் அவர்களுக்குள், கபில் தேவும், கில்கிறிஸ்டும், ஜெயசூர்யாவும் ஒழிந்து கொண்டு இருக்கிறார்கள். அத்தனை ஜாம்பவான்களையும் மொத்தமாக சந்திக்க முடியாமல், சுத்தமாக சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டது ஆஸ்திரேலியா.