இன்னும் இது எத்தனை காலம்? பெட்ரோல் அரசியல்.. புரிஞ்சவங்க பிஸ்தாதான்!
சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90ஐ நெருங்கிவிட்டது. விரைவில் 100 ரூபாயை தொட்டாலும் ஆச்சர்யப்பட தேவையில்லை. ஏனெனில் அதற்கான நேரமும் நெருங்கிவிட்டது.
2015ம் ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல விலை ஒரு லிட்டர் 61 ரூபாய் ஆகவும், டீசல் விலை 46.80 ரூபாய் ஆகவும் இருந்தது. ஆனால் அடுத்த ஐந்து வருடத்தில் தற்போது பெட்ரோல் விலை 90 ஆகவும், டீசல் விலை 82.66 ஆகவும் உள்ளது .
பெட்ரோல் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு மடங்கு உயர்ந்து விட்டது. டீசல் விலைகிட்டத்தட்ட பாதி அளவிற்கு உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெட்ரோல் டீசல் வைத்து இயக்கும் வாகனங்களை மட்டும் பாதிப்பது இல்லை. ஒவ்வொரு பொருளின் விலையையும் அவை தான் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு பொருளின் மீதான வரியையும் பெட்ரோல் டீசல் விலைதான் தீர்மானிக்கிறது.
திணித்த வரிகள்
அரசுக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக பெட்ரோல் டீசல் வரிகள் உள்ளன. அரசு 2014ம் ஆண்டுக்குபின் 2021ம் ஆண்டுக்குள் பெட்ரோல் டீசல் மீது திணித்த வரிகளை வெளிப்படையாக வெளியிட்டால் தான் எவ்வளவு ரூபாயை ஒவ்வொரு நாளும் இழக்கிறார்கள் என்பது தெரியவரும்.
பெட்ரோல் போட வேண்டுமா
பெட்ரோல் இல்லாமல் வாகனம் இயங்காது என்பதால் நாம் என்ன விலை கொடுத்தாவது வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமை உள்ளதால், வரிகளும் விலைகளும் மக்களை பாதிக்கிறது. எனவே இப்போதைய நிலையில் பெட்ரோலை மட்டுமே நம்பிக்கொண்டு வாகனங்களை இயக்குவது சரியா என்று நாம் யோசித்தாக வேண்டும்.
வரிகளை நீக்கலாம்
முன்பெல்லாம் நடந்து போன இடத்திற்கும் இப்போது இருசக்கர வாகனத்தில் செல்கிறோம். முன்பெல்லாம் சைக்கிளில் சென்ற இடத்திற்கு இப்போது இருசக்கர வாகனத்தில் தான் செல்கிறோம். இதனால் தான் நாம் அதிக அளவு பெட்ரோலை உறிஞ்சி, அதிக வரிக்குள் ஆளாகிறோம். சுற்றுச்சூழலையும் மாசாக்குகிறோம். என்ன பழைய பல்லவி பாடுகிறேன் என்று நினைக்க வேண்டாம். சைக்கிளில் செல்வதை அதிகரிப்பதே நம் பணத்தை மிச்சப்படுத்த உள்ள நல்ல வழி. அரசும் சைக்கிளில் செல்வதை ஊக்கப்படுத்தும் திட்டங்களை அறிவிக்க வேண்டும். சைக்கள்களுக்கு வரிகளை நீக்கலாம். சைக்கிள் வாங்க மானியம் அளிக்கலாம்.
நோய்களை சம்பாதிக்கிறோம்
சைக்களில் தற்போது பேட்டரிகள் பொருத்தப்பட்டு, எவ்வளவு மேட்டிலும் எளிதாக செல்லும் வகையில் மாற்றங்கள் உருவாகி வருகின்றன. எனவே சைக்கிள் ஓட்ட முடியாதவர்கள் கூட மெதுவாக இந்த முறைக்கு மாறினால், உடல் நலனும் காப்பாற்றப்படும். நோய்களை சந்தித்து மருத்துமனைக்கு சம்பாதிக்கும் பணத்தை அழ வேண்டிய தேவையும் இருக்காது. வேகமாக போனால், நோயும் வேகமாக வரும் என்பதால் நிதானமாக செல்வதே நல்லது.
பணம் மிச்சம்
இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். மின்சார வாகனங்களுக்கு நாம் மாறினால் நாம் நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும். டெல்லி அரசு அண்மையில் அனைத்து வாகனங்களையும் மின்வாகனமாக மாற்றப்போவதாக கூறியது. அதேபோல் அனைத்து மாநில அரசுகளும் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றினால் ஏராளமான பணம் மிச்சமாகும்.
வாகனங்கள் தயாரிக்க வேண்டும்
இனி வரும் காலத்தில் மின்சார வாகனங்கள் பங்கு அளப்பரியதாக இருக்க போகிறது. மின்சார வாகனங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் அதிகமாக தயாரிக்கப்பட வேண்டும். பல புதுமைகளை புகுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மையங்களுக்கு மாற்றாக அதே இடத்தில் சார்ஜ் ஏற்றும் மின்சார வாகன சார்ஜர் மையங்களை அரசு உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் நல்ல பலன் நமக்கு உண்டு.