போதிய நீரின்றி அவதி.. தொற்று நோய் பரவும் அபாயம்.! விழி பிதுங்கும் சென்னை மருத்துவமனைகள்
சென்னை: தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 4,000- க்கும் மேற்பட்ட தனியர் மருத்துவமனைகள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன
கழிப்பறை முதல் ஆபரேஷன் தியேட்டர் வரை, சுத்தப்படுத்துவதற்கு போதிய தண்ணீர் கிடைக்காத அவல நிலையில் மருத்துவமனைகள் உள்ளன.
இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தரமன சிகிச்சை அளிக்க போதிய தண்ணீரை வழங்க, அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய மருத்துவர்கள், தாங்கள் மருத்துவமனைகளில் முக்கியமாக சந்திக்கும் பிரச்சனையாக கை கழுவுதல் உள்ளது. தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டுமெனில் அதற்கு முதலில் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டியது கை கழுவுவதற்கு தான்.
ஆனால் கையை தாராளமாக சுத்தப்படுத்த போதிய தண்ணீர் மருத்துவமனைகளில் இல்லை, என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.அடுத்த முக்கிய பிரச்சனை தற்போதைய வெப்ப தாக்கத்தில் குடிக்க கூட உரிய நீர் கிடைக்காவிட்டால் டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்.. ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு
போன ஆண்டு முதல் சிறப்பு பிரிவு என்ற பெயரில் அனைத்து மருத்துவமனைகளிடமிருந்து பன்மடங்கு சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி அதிகரித்து வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆனால் போதிய அளவு தண்ணீர் இல்லாதபட்சத்தில், எங்கள் மருத்துவமகைளில் உள்ள நோயாளிகளை நாங்கள் எவ்வாறு பார்த்து கொள்வோம் என மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முக்கியமான சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளின் போது தண்ணீர் இன்றி, நாங்கள் நோயாளிகளை எப்படி தொற்று தாக்காமல் பார்த்து கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போது தனியார் டேங்கர் லாரிகளை மட்டுமே மருத்துவமனைகள் நம்பியுள்ளன. ஆனால் சென்னையிலிருந்து 100 கி.மீ தூரத்தில் கொண்டு வரப்படும் லாரி தண்ணீர் கிடைப்பதும், சமயத்தில் அரிதாகி விடுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்து வரும் நாட்களில் தண்ணீர் பிரச்சனையை சமாளிப்பது எப்படி என்று தனியார் மருத்துவமனைகள் விழி பிதுங்கி நிற்கின்றன.