ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முறைகேடு வழக்கு.. எதிர்மனுதாரராக சிபிஐ சேர்ப்பு.. ஹைகோர்ட் அனுமதி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் வகையில், சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்த்து, மனுவில் திருத்தம் செய்ய அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரது, ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலின் போது, அதிமுக சார்பில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பணபட்டுவாடா தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வழக்கறிஞர் வைரக்கண்ணனும், பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுக வேட்பாளர் மருது கணேஷும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில், பணபட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் வகையில், ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்ய அனுமதி கோரியும், தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் செலவுத்தொகையை இழப்பீடாக வழங்க கோரியும் திமுக வேட்பாளர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, சிபிஐ விசாரணை கோரும் வகையில், சிபிஐ- யை எதிர்மனுதாரராக சேர்த்து, மனுவில் திருத்தம் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டது. அதேசமயம், தேர்தல் செலவை இழப்பீடாக வழங்க கோரிய கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். ஆர்.கே.நகர் பணபட்டுவாடா தொடர்பான பிரதான் வழக்கு பிப்ரவரி 11 ம் தேதி விசாரணைக்கு வருகிறது.