ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு ரத்து.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு ஷாக் தகவல்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருந்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்ததை ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசு சார்பில் ஹைகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே.நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சசிகலா தலைமையில் அப்போது அதிமுக இருந்தது. அதிமுக சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் என மொத்த ஆளும் கட்சியும் ஆர்.கே.நகர் பிரச்சார களத்தில் குதித்தன.
அப்போது அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் எழுந்தது. தகவல் அறிந்து வருமான வரித்துறையினர் ரெய்டுகள் மேற்கொண்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பணப்பட்டுவாடா புகார் உறுதி செய்யப்பட்டதையடுத்து தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்தது.
இதுதொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில், திமுக மற்றும் வைரக்கண்ணு என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வைரக்கண்ணு தொடர்ந்த வழக்கில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தாங்கள் கேட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அபிராமபுரம் காவல்நிலையத்திற்கு பரிந்துரை செய்தாகவும் பதில் அளித்திருந்தது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மனு செய்திருந்தார்.
இதையடுத்து பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை இணை ஆணையர் தலைமையில் விசாரிக்க ஹைகோரட் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினஆர். இந்த வழக்கில் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வில்சன் வாதிடுகையில் தெரிவித்தார். வைரக்கண்ணு சார்பில் தேர்தல் ஆணையம் புகார் அளித்தும் காவல்நிலையத்தில் இருந்து இதுவரை எந்த அறிக்கையும் சமர்பிக்கவில்லை என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு என்ன சொல்கிறது என்று உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது. அப்போது, இந்த வழக்கு, 2018 பிப்ரவரி மாதம் ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.