ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு.. சிபிஐ விசாரணை கோரிய திமுக பரபரப்பு வாதம்.. தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில் சிபிஐ விசாரணை கோரி திமுக தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, அபிராமபுரம் காவல் நிலையம் பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும், பணப்பட்டுவாடா-வை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க கோரியும் வழக்கறிஞர் வைரக்கண்ணன் மற்றும் திமுகவை சேர்ந்த மருது கணேஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையில், ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் பண பட்டுவாடா செய்தது தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக காவல் நிலையத்தில் புதிதாக புகார் அளிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
வருமான வரி
இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் விஜயபாஸ்கரின் 8 நிதி ஆண்டுகால வருமான வரி மதிப்பீட்டில் 4 ஆண்டு காலம் முடிவடைந்திருப்பதாகவும், மீதமுள்ள 4 நிதி ஆண்டு கால மதிப்பீட்டை முடிக்க மேலும் ஒரு ஆண்டு காலம் ஆகும் என தெரிவித்தார்.
அரசு வழக்கறிஞர்
அதேபோல இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் சிபிஐ'யை இணைக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தார். அபிராமபுரம் காவல் ஆய்வாளர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பணப்பட்டுவாடா புகார் குறித்து 828 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது... ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் பணப்பட்டுவாடா புகாரில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யதுள்ளதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது என தெரிவித்தார். மேலும், வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வருமான வரித்துறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்யவில்லை எனவும் வாதிட்டார்.
புதிய புகார்
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், பணப்பட்டுவாடா புகாரில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகள் புதிய புகாரை அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அபிராமபுரம் காவல் ஆய்வாளர்
இந்திய தேர்தல் ஆணையம், வருமான வரித்துறையை சார்ந்து இருப்பது தவறு என்றும், வருமான வரித்துறை அறிக்கைக்காக குற்றாவளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தையும் மோசடி செய்யும் செயல் என குற்றம்சாட்டினார்.மேலும், இந்த வழக்கில் சிபிஐயை இணைக்க வருமான வரித்துறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆட்சேபனம் தெரிவிக்காத நிலையில், அபிராமபுரம் காவல் ஆய்வாளர் எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என்றும், அவருக்கும் இந்த வழக்கில் சம்பந்தம் இருக்கலாம் எனவும் வாதிட்டார்.
தேதி குறிப்பிடாமல்
இதனையடுத்து, பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய திமுக தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.பின்னர், பிரதான வழக்கின் விசாரணையை பிப்ரவரி 11-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.