தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு.. விழாவில் பங்கேற்க 500 பேருக்கு அழைப்பு!
சென்னை: தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்க உள்ளார். கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
Recommended Video
தமிழகத்தின் கவர்னராக இருந்து வந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார்.
குஜராத்: புதிய அரசின் அமைச்சரவையில் எல்லாமே புதுமுகம்.. மாஜிக்களுக்கு இடமில்லை.. பின்னணி இதுதான்!
புதிய கவர்னர் ஆர்.என்.ரவி
புதிய கவர்னராக பொறுப்பேற்க உள்ள ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் புதிய கவர்னர் ஆர்.என்.ரவியை வரவேற்றனர்.
பதவியேற்கிறார்
புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இன்று காலை தமிழகத்தின் கவர்னராக பதவியேற்க உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில் ஆர்.என்.ரவிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் கவர்னர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து விழா எளிமையான முறையில் நடைபெறுகிறது.
முக்கிய பிரமுகர்கள் மட்டும்
முக்கிய பிரமுகர்கள் சுமார் 500 நபர்கள் மட்டுமே விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர். ஆர்.என்.ரவி தமிழகத்தின் 25-வது கவர்னராக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஆர்.என்.ரவி?
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆர்.என்.ரவி நாகாலாந்து கவர்னராக இருந்து வந்தவர். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் பிரதமர் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளார். கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார். உளவுத்துறையிலும் பணியாற்றியுள்ள ஆர்.என்.ரவி, 2019ஆம் ஆண்டு முதல் நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார். ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டதில் சந்தேகம் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கூறியது குறிப்பிடத்தக்கது.