செங்கல்பட்டு டூ கல்பாக்கம்.. 9,170 மரக்கன்றுகளுடன் ஈசிஆரை இணைக்கும் அசத்தல் பசுமை சாலை வந்தாச்சு
சென்னை: செங்கல்பட்டில் இருந்து கல்பாக்கம் செட்ரஸ் இடையேயான சாலையை கானொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
இந்த சாலைத் திட்டம்1 கோடியே 84 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை திட்டத்தில் ஏற்கெனவே 7.00மீ அகலத்தில் இருந்த தார் சாலையானது இருபுறமும் 1.50மீ அகல கடின புருவங்களுடன் 10.00மீ அகலத்திற்கு இருவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சட்ராஸ் - செங்கல்பட்டு சாலையின் இரு மருங்கிலும், 9,170 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதால் பசுமை வழித்தடமாக சாலை அமைந்துள்ளது.
செமஸ்டர் தேர்வு.. ஈரானில் தவிக்கும் மீனவர்கள்.. மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி 2 கடிதம்
மழைநீர் வாய்க்கால்
குடியிருப்பு பகுதிகளில் சாலையின் ஓரம் 7.82 கி.மீ நீளத்திற்கு ஆர்.சி.சி கட்டுமான வடிகால் வாய்க்காலும், மீதமுள்ள சாலை வழிதடத்தின் இருபுறமும் மழைநீர் வாய்க்காலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சாலையிலுள்ள 3 சிறிய பாலங்கள் 33 குழாய் பாலங்கள் 5 பெட்டி பாலங்கள் மற்றும் 1 சிறுபாலம் அகலப்படுத்தப்பட்டுள்ளன.
பாலங்கள்
ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருந்த 2 சிறிய பாலங்கள், 4 குழாய் பாலங்கள் மற்றும் 24 பெட்டி பாலங்கள் திரும்பக் கட்டப்பட்டுள்ளன. 17 பெட்டி பாலங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. தற்பொழுது இப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறந்துவிட தயார் நிலையில் உள்ளது.
பாதுகாப்பு
மேம்படுத்தப்பட்ட இந்த சாலை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதின் மூலமாக சாலை உபயோகிப்பாளரின் பயணம் பாதுகாப்பாக அமைவதுடன் பயண நேரமும் வெகுவாக குறையும். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இச்சாலை வழித்தடத்தில் 22 பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டுள்ளன.
கிராமங்களுக்கு பலன்
சட்ராஸ் முதல் செங்கல்பட்டு வரையிலான இச்சாலை வழித்தடத்தில் உள்ள சட்ராஸ், குன்னத்தூர், நெய்குப்பி, நத்தம்கரியச்சேரி, ஈகை, திருக்கழுக்குன்றம், கீரப்பாக்கம், துஞ்சம், நென்மேலி மற்றும் செங்கல்பட்டு ஆகிய 10 கிராமங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் பயன் அடையத்தக்க வகையில் இச்சாலை அமைந்துள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை
குறிப்பாக சட்ராஸ் முதல் செங்கல்பட்டு சாலையானது NH 45 (சென்னை-தேனி சாலை) மற்றும் ECR (கிழக்கு கடற்கரை சாலை) ஆகிய இரண்டு நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலின்றி குறைந்த பயண நேரத்தில் பாதுகாப்பான போக்குவரத்தினை மேற்கொள்ள ஏதுவாக அமையும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.