1.5 கிலோ நகைகள் திருட்டு.. 5 மாசமாச்சு.. போலீஸ் அலட்சியம் காட்டுகிறது.. நடிகர் பார்த்திபன் புகார்
பார்த்திபன் வீட்டில் நகை கொள்ளை குறித்து போலீசில் புகார் அளித்தார்.
சென்னை: நகை திருடு போய் 5 மாசமாச்சு.. குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை.. எப்படியாவது இதில் நடவடிக்கை எடுங்கள் என்று நடிகர் பார்த்திபன் புகார் அளித்துள்ளார்.
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வீடு திருவான்மியூர் மேற்கு காமராஜர் நகரில் உள்ளது. தனது வீட்டின் ஒரு போர்ஷனை ஆபீசாக பயன்படுத்தி வருகிறார் பார்த்திபன். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இவர் வீட்டில் ஒரு திருட்டு சம்பவம் நடந்து விட்டது.
வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், பீரோ லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகையை ஆட்டைய போட்டு விட்டார்கள்.
2-வது புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் உடனடியாக திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அது சம்பந்தமாக போலீசார் விசாரித்து வந்தனர்.இந்த நிலையில், 2 மாசம் கழித்து அதாவது ஜூலை மாதம் இன்னொரு புகாருடன் வந்தார் பார்த்திபன்.
எப்படி மாயமானது?
அதில், வீட்டில் ஏற்கனவே திருடு போன நகைகளுடன் சேர்த்து ஒன்றரை கிலோ தங்க நகைகளும் மாயமாகி விட்டதாக சொல்லி இருந்தார். இதை கேட்டு அதிர்ந்த போலீசார், நகை எப்படி மாயமாகி இருக்கும் என்ற விசாரணையில் இறங்கினர்.
க்ளூ கிடைக்கவில்லை
ஆனால் வீட்டின் கதவுகள் எதுவும் உடைக்கப்படாமலேயே இந்த திருட்டு நடந்திருப்பதை பார்த்து போலீசார் இன்னமும் குழம்பி விட்டார்கள். அதனால் பார்த்திபன் வீட்டில் வேலை செய்பவர்கள், டிரைவர்கள் என எல்லோரிடமும் போலீசார் விசாரணை நடத்தியும் எந்த க்ளூவும் போலீசுக்கு கிடைக்கவே இல்லை. இந்த நிலையில்தான் பார்த்திபன் திரும்பவும் இன்னொரு புகார் அளித்துள்ளார்.
கமிஷனர் விஸ்வநாதன்
ஆனால் இந்த முறை அவர் நேராக போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றுவிட்டார். கமிஷனர் ஏகே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து நகைகள் திருட்டு போனது தொடர்பாக புகார் அளித்தார். நகைகள் மாயமாகி 5 மாசமாகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
விசாரணை தீவிரம்
போலீசார் இந்த விஷயத்தில் காலந்தாழ்த்துவதாக பார்த்திபன் கூறியதாகவும் தெரிகிறது. எனினும் விரைவில் திருடியவர்களை கைது செய்வோம் என பார்த்திபனுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.