ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த நல்லம நாயுடு வீட்டில் கொள்ளை.. பரபரப்பில் சென்னை!
சென்னை: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி நல்லம நாயுடு வீட்டில் நேற்றிரவு பணமும் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை பெரவள்ளூர் பகுதியில் பெரியார் நகர் சந்திரசேகரன் சாலை பகுதியில் வசித்து வந்தவர் நல்லம நாயுடு. இவர் உடல்நிலை சரியில்லாததால் நவம்பர் 16ஆம் தேதி காலமானார்.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்தவர் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லம்ம நாயுடு காலமானார்..! சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியவர்..!
தேனி மாவட்டம்
இவரது வீட்டில் இருந்த மகன் சரவணன் மற்றும் உறவினர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வருகிறார்கள். இதனால் நவம்பர் 16 ஆம் தேதி முதல் நல்லம நாயுடுவின் வீடு பூட்டியே இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் சரவணனின் உறவினர் அந்த வீட்டை சுத்தம் செய்ய சென்றார்.
அதிர்ச்சி
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே சரவணனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து மற்றொரு உறவினர் ஆசைத்தம்பிக்கு போன் செய்து சரவணன் நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் ஆசைத்தம்பி வீட்டிற்கு சென்று பார்த்தார்.
பெரவள்ளூர் போலீஸ்
அப்போது பீரோ உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டன. இதுகுறித்து பெரவள்ளூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த 7 சவரன் தங்க நகை, ரூ 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
விசாரணை
இதுகுறித்து சரவணன் உள்ளிட்டோர் சென்னை பெரவள்ளூர் வீட்டிற்கு வந்தால்தான் உண்மையில் என்னவெல்லாம் காணாமல் போயிருக்கிறது என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரவள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.