ஊடகத்தினரை சந்திக்க வேண்டும்- ராபர்ட் பயஸ் வேண்டுகோள்
விடுதலை குறித்த விஷயங்களை கூற ஊடகத்தினரை சந்திக்க அனுமதி.. காவல்துறை அதிகாரிக்கு ராபர்ட் பயஸ் கடிதம்
சென்னை: ஊடகதத்தினரை சந்திக்க விரும்புவதாக ராபர்ட் பயஸ் கூடுதல் காவல் துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதன் மீது ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார்.
இதுகுறித்து ராபர்ட் பயஸ், கூடுதல் காவல் துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், சட்டப்படியான நீதி மறுக்கப்பட்டு தமிழக சிறையில் 28 ஆண்டுகளாக வாழும் நிரபராதி ஒருவனின் வேண்டுகோள் விண்ணப்பம் இது. மிகுந்த கரினத்தோடு இதனை பரிசீலனை செய்வீர்கள் என நம்புகிறேன்.
புரட்டி போட்டது
எனது குழந்தை பாதுகாப்புடன் பிறந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கருவுற்றிருந்த மனைவியுடன் உள்நாட்டுப் போர் நடந்த இலங்கையிலிருந்து 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தேன். 21.05.1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டு வெடிப்பு எனது வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது.
ஆளுநரின் ஒப்புதல்
கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு அரசியல் சாசன உறுப்பு 161 கீழ் மாநில அரசு விடுதலை குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கூடி எனக்கும் ஏனைய அனைவருக்கும் விடுதலைக்கான பரிந்துரை வங்கி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
28 ஆண்டுகள் நீதி மறுப்பு
ஏற்கெனவே நான்கு மாதங்கள் முடிந்த பின்னரும் இது குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது நான்கு மாத துன்பமோ அல்லது நான்கு ஆண்டுகள் துன்பமோ இல்லை. ஏறத்தாழ 28 ஆண்டுகளாக நீதி மறுக்கப்பட்டவர்களின் துன்பம்.
அநாதைகள்
விடுதலையைத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் விவரிக்க முடியாத மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கிறேன். சிறையில் இருந்த கால கட்டத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். நோய் வாய்ப்பட்டிருக்கும் என் தாயைப் பராமரிக்க இயலாத நிலையில் வாழ்கிறேன். என் மனைவியும் மகனும் தொலை தூரத்தில் அநாதைகளைப் போல் வாழ்கின்றனர்.
அவநம்பிக்கை
ஆகையால்தான் கடந்த 2017-ம் ஆண்டு கருணைக் கொலை வேண்டி தமிழக முதல்வருக்கு விண்ணப்பம் அளித்திருந்தேன். இதுபோல் நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையில் தொடர்ந்து வாழ்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஊடகங்களை சந்தித்து பேச
இது முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன். எனவே, எனது விடுதலைக் குறித்து உலகத்தார்க்குச் சிலவற்றை சொல்ல விரும்புவதால் செய்தி ஊடகங்களைச் சந்தித்து பேச அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு எழுதியுள்ளார்.