திரும்பவும் சர்ச்சையில் சிக்கிய சென்னை விமான நிலைய மேற்கூரை.. இடிஞ்சு விழலை.. ஆனா...!
சென்னை விமான நிலைய மேற்கூரை மழை காரணமாக பல இடங்களில் ஒழுகியது.
Recommended Video
சென்னை: சென்னை விமான நிலையம் மழை காரணமாக பல இடங்களில் ஒழுகியதால் பயணிகள் அசௌகரியம் அடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாடு என உலகின் அனைத்து பகுதிகளுக்கும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதி இந்த விமான நிலையம் 2013-ம் ஆண்டு ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உலக தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதனால் பல்வேறு வசதிகளுடன் சென்னை விமான நிலையம் பார்ப்பதற்கு பிரமாண்டமாக உருவானது. ஆனால் ஒய்யாரமா தாழம்பூ என பழமொழிக்கேற்ப, அவ்வப்போது அங்கு மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதனால் விமான நிலையத்திற்குள் செல்பவர்கள் பாதுகாப்பிற்கு தலையில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவிற்கு ஆனது.
இரண்டு நாள் மழைக்கே:
இந்நிலையில், சென்னை விமான நிலைய மேற்கூரை இரண்டு நாள் மழைக்கே தாக்குப் பிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாள் பெய்த மழையில் விமான நிலையத்துக்கு பயணிகள் வந்து போகும் இடங்களில் கூரையில், பல இடங்களில் தண்ணீர் ஒழுகியதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒழுகிய மழைநீர்:
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக செல்லும் 2-வது மாடியின் மேற்கூரை மற்றும் முதல் தளத்தில் காலியாக உள்ள இடத்திலும் மழைநீர் கொட்டியது. இதேபோல், பயணிகளை பரிசோதனை செய்யும் இடத்தில் பக்கவாட்டு சுவர் வழியாக மழைநீர் பயணிகள் நிற்கும் பகுதிக்குள் புகுந்தது. இதனால் பயணிகள் அசௌகரியம் அடைந்தனர்.
உடனடி நடவடிக்கை:
உடனடியாக இது குறித்து விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக கூரையில் இருந்து மழைநீர் கொட்டிய 3 இடங்களையும் சரி செய்ய முயற்சி நடந்தது. ஆனாலும், அது பலனளிக்கவில்லை. எனவே, மழை நீர் ஒழுகிய இடங்களில் பிளாஸ்டிக் பாத்திரங்கள் வைக்கப்பட்டது. அதில் நிறையும் நீரை அவ்வப்போது விமான நிலைய ஊழியர்கள் பிடித்து வெளியே ஊற்றினர்.
பயணிகள் அதிர்ச்சி:
சர்வதேச தரம் கொண்ட சென்னை விமான நிலைய மேற்கூரை 2 நாள் மழையைக்கூட தாங்க முடியாத அளவிற்கு ஒழுகுவது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு நாள் மழைக்கே இப்படியென்றால், தொடர்ச்சியாக மழை பெய்தால் விமான நிலையத்திற்குள் படகில் தான் செல்ல வேண்டும் போலயே என பலர் வெளிப்படையாகவே கமெண்ட் அடித்தபடிச் சென்றனர்.