மெரினாவில் சுழன்று அடிக்குது காத்து.. லைட் ஹவுஸ் செல்ல தடை!
Recommended Video
சென்னை: மெரினா கடற்கரையில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் சீற்றத்தோடு காணப்படுவதால் கலங்கரை விளக்கத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் மழை விடாமல் பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருவதால், மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வருகின்றன. பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் சென்னையின் பல பகுதிகளில் தூரல் மழையுடன், குளிர்ந்த காற்று வீசியது. வானில் கரு மேகங்கள் சூழ்ந்ததால், பகல் பொழுது இரவு போல் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கடற்கரை சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றும் பணியில் போக்குவரத்துக் காவல்துறையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், மெரினா கடற்கரையில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் சீற்றத்தோடு காணப்படுவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் கலங்கரை விளக்கத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சாலைகள் வெறிச் சோடி காணப்படுகிறது.