மீண்டும் ஒரு பிறந்தநாள் விழா...வடசென்னையை கலக்கிய தாதாவின் கூட்டாளி உள்பட 4 பேரை "தூக்கிய" போலீஸ்
சென்னை: ரவுடி குங்பூகுமாரின் பிறந்த நாளை கொண்டாட வந்த மறைந்த தாதா சின்னாவின் கூட்டாளி சரவணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் , 8 பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குங்பூ குமார். இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரவுடிகள் வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பறிமுதல்
அதன்பேரில் போலீஸார் அந்த பகுதியில் முகாமிட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த சரவணன் என்பவரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரது காரில் இருந்த 8 பட்டா கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வடசென்னையை கலக்கிய தாதா
மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பர் சிவா, கத்திகள் செய்து கொடுத்த ரமேஷ் , கோபால் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சரவணன் வடசென்னையை கலக்கி வந்த பிரபல தாதா சின்னா(எ) சென்னகேசவலுவின் கூட்டாளியாவர்.
வாக்குமூலம்
ஆந்திராவில் சட்டம் படித்த இவர் மீது கே.கே. நகர் கதிரவன் (காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியமானவர் கதிரவன்) கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் உள்ளன. சின்னாவை கொலை செய்த தாதா ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தற்காப்புக்காக கத்திகளை வைத்திருந்ததாகவும் போலீசாரிடம் சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பினு பிறந்தநாள்
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் புளியந்தோப்பு போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு அருகே நடந்த ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 72 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சரவணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.