பட்டப் பகலில் பயங்கரம்.. நடு ரோட்டில் விரட்டி விரட்டி ரவுடி வெட்டி கொலை.. சென்னையில்!
சென்னையில் பட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
Recommended Video
சென்னை: பட்டப்பகலில் நடுரோட்டில் இளைஞர் ஒருவரை மர்மகும்பல் அரிவாளால் விரட்டி விரட்டி வெட்டியதை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.
எப்போதும் பூந்தமல்லி நெடுஞ்சாலை மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்புடன்தான் இருக்கும். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அரும்பாக்கத்தில் இருக்கும் வைஷ்ணவா கல்லூரிக்கு அருகே இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் திடீரென்று வந்த 3 பேர் அவரை வழிமறித்து தாக்க ஆரம்பித்தார்கள். பிறகு 3பேரும் அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டவும் ஆரம்பித்தார்கள். இதனால் அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல இளைஞர் ரோட்டில் ஓட ஆரம்பித்தார்.
களேபரம் ஆனது
இளைஞர் ஒருவரை 3 பேர் அரிவாளால் வெட்டி கொண்டிருப்பதை பார்த்து, பொதுமக்களும் தலைதெறித்து ஓட்டம் பிடித்தனர். ஒரு பக்கம் இளைஞர் ஓட, மற்றொரு பக்கம் பொதுமக்களும் ஓட பூந்தமல்லி நெடுஞ்சாலையே களேபரமானது.
விசாரணை
இறுதியில் இளைஞரை விரட்டி விரட்டியே அரிவாளால் வெட்டி சாய்த்தது அந்த மர்மகும்பல். இதுபற்றி உடனடியாக அரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசாரும், இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ரவுடி குமரேசன்
அப்போது படுகொலை செய்யப்பட்டது சூளைமேட்டை சேர்ந்த ரவுடி குமரேசன் என தெரிய வந்தது. இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்திருக்கிறார். மேலும் இவர் மீது கொள்ளை, கொலை வழக்குகள் சூளைமேடு போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளன.
கோர்ட்டில் ஆஜர்
இதில் கொலை வழக்கு விசாரணையும் இப்போது நடந்து வருகிறது. அந்த வழக்கின் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பி வரும்போதுதான், அவரது எதிரிகள் இப்படி பின்னாடியே தொடர்ந்து வந்து கொலைவெறியை காட்டியிருக்கிறார்கள் என தெரியவந்தது. ஆனால் கொலையாளிகள் யார் என தெரியவில்லை. அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கொலையாளிகள் முகம்
நெடுஞ்சாலை என்பதால் அங்குள்ள கேமராக்களில் கொலையாளிகள் முகம் பதிந்துள்ளது. எனவே அதன் அடிப்படையிலும் விசாரணை துவங்கி உள்ளது. குமரேசனை கொலை செய்ய ஏற்கனவே முயற்சி நடந்து அது தோல்வியானதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் கண்முன்னாடியே நடந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.