முகம் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட ரவுடி ஸ்ரீதர்.. இன்னொருவரும் கொல்லப்பட்டதால் பரபரப்பு
செங்கல்பட்டு அருகே ரவுடி ஸ்ரீதர் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சென்னை: வண்டலூர் அருகே தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ரவுடி ஸ்ரீதரின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.
ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் டாடா சுமோ கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. ரோட்டோரம் ரொம்ப நேரமாகவே அந்த கார் நின்று கொண்டிருந்ததால், அதன் அருகே சென்று பொதுமக்கள் பார்த்தார்கள். அப்போது காரில் ரத்தக் கறை இருந்தது தெரிந்ததும் அலறியடித்து கொண்டு வந்து வண்டலூர் போலீசில் புகார் சொன்னார்கள்.
உடனே போலீசாரும் விரைந்து காரை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். ஆனால் காருக்குள் யாரையுமே காணோம். ரத்தக்கறை மட்டும் இருந்ததால், யாரோ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்து சுற்றுவட்டார பகுதிகளில் தேட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் நேற்றிரவு விஜிபி திடலில் முகமும், தலையும் சிதைக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்தது.
சிதைக்கப்பட்ட முகம்
அது யார் என்ன என்று விசாரித்தபோது, கொலையுண்டவர் ரவுடி ஸ்ரீதர் என தெரியவந்தது. ரவுடி ஸ்ரீதர் ஊரப்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவார். அதிமுக பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பெருமாளை கொலை செய்த வழக்கில் இவருக்கு முக்கிய தொடர்பு இருந்ததால் கைதானவர். கொஞ்ச நாள் முன்னாடிதான் ஜாமீனில் வெளியேவந்தார்.
முன்விரோதம்
எனவே ஸ்ரீதரை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தனிப்படை ஒன்றினை அமைத்து தேடி வருகிறார்கள். இதனிடையே அந்த கார் யாருடையது என்று விசாரித்தபோது, அது பெருமாளின் சொந்தக்காரருடையது என தெரியவந்தது. அதனால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ராமமூர்த்தி
இதனிடையே, மாமண்டூர் பகுதியில் ஒருவர் தண்ணி அடித்து விட்டு கலாட்டா செய்துள்ளார். அவர் பெயர் ராமமூர்த்தி. அவரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். அப்போதுதான் பெருமாள் கொலைக்கு பழி வாங்குவதற்காக ஸ்ரீதரை கொலை செய்து ஊரப்பாக்கத்தில் வீசியதாக ராமமூர்த்தி போலீசில் சொன்னார்.
இன்னொருவரும் கொலை
இதையடுத்துதான் ஸ்ரீதர் உடல் விரைந்து கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து ராமமூர்த்தியிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீதருடன் வந்த நண்பரையும் கொலை செய்ததாக சொன்னார். இதனால் அதிர்ந்த போலீசார் ஸ்ரீதருடன் கொல்லப்பட்டது யாராக இருக்கும்? என அவரது உடலையும் தேடி வருகிறார்கள்.