எழும்பூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சிறுமி.. கனநொடியில் காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர்
சென்னை: சென்னை எழும்பூரில் உழவன் எக்ஸ்பிரஸில் ஏற முயன்ற போது பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிய சிறுமியின் உயிரை ஆர்பிஎப் வீரர் காப்பாற்றினார். அவருக்கு சிறுமியின் தந்தை கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி 20க்கும் மேற்பட்ட ரயில்கள் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணிக்கிறார்கள்.
கடந்த சனிக்கிழமை இரவு 10.40 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் இருந்து தஞ்சாவூருக்கு உழவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு கொண்டு இருந்தது.
உழவன் எக்ஸ்பிரஸ்
அப்போது பீகாரைச் சேர்ந்த அஸ்வினி குமார் என்பவர் தனது மகள் அனாமல் சர்மாவுடன் தஞ்சாவூருக்கு செல்வதற்காக வந்துள்ளார். ரயில் புறப்பட்டு கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அஸ்வினி குமார் மற்றும் அவரது மகள் ஆகியோர், கையில் பை மற்றும் சூட்கேசுடன் ஓடிப்போய் ஏற முயன்றனர்.
காப்பாற்ற முடியாத தந்தை
அஸ்வினி குமார் முதலில் தனது மகளை ஏற்றிவிட முயற்சித்துள்ளார்.அப்போது ரயில் கொஞ்சம் வேகமாக செல்லவே அனாமல் சர்மா தவறி விழுந்தார். சிறுமி அனாமல் பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதனை பார்த்த அஸ்வினி குமார், ஒரு கையில் சூட்கேசை வைத்துக்கொண்ட மற்றொரு கையில் மகளை பிடித்து இழுக்க முயற்சித்தார். ஆனால முடியவில்லை.
காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர்
அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஜோஸ்கான், சிறுமி தவறிவிழுந்து உயிருக்கு போராடுவதை பார்த்து உடனடியாக விரைந்து சென்று சிறுமியை பிடித்து பிளாட்பாரத்தில் இருந்து வெளியே இழுத்து உயிரை காப்பாற்றினார்.
கண்ணீர் மல்க நன்றி
இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அந்த சிறுமிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அவர்களிடம் ஓடும் ரயிலில் ஏறக்கூடாது என எச்சரித்த போலீசார் சிறுமி மற்றும் தந்தையை அதே ரயிலில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிறுமி அனாமல் மற்றும் அவரது தந்தை ஆகியோர் காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர் ஜோஸ்கானுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.சிறுமியை போலீசார் காப்பாற்றும் சம்பவம் சென்னை எழும்பூர் ரயில் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.ஆர்பிஎப் வீரர் ஜோஸ்கானுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.