10 ரூபாய் டாக்டர் கோபால் மறைவு - சோகத்தில் வண்ணாரப்பேட்டை மக்கள்
சென்னையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர் கோபால், உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சென்னை: சென்னையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர் கோபால் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் அவரது மறைவு செய்தி வண்ணாரப்பேட்டை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மருத்துவர் கோபால் மறைவு செய்தியால் அதிர்ச்சி அடைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 10 ரூபாய் டாக்டர் என்ற அடைமொழியுடன் மருத்துவத்தை சேவையாக செய்தவர் கோபால் என ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்.
மன்னார்குடியை பூர்வீகமாகக் கொண்ட கோபால் அவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றினார். மருத்துவ பேராசிரியராகவும் அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்த கோபால் கடந்த 2002ஆம் ஆண்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்
பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் ஆகவும் மருத்துவ பேராசிரியராகவும் பணியாற்றி பேரெடுத்த மருத்துவர் கோபால் கடந்த 1969ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் சிறியதாக கிளினிக் வைத்து மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்
ஆரம்பத்தில் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்களுக்கு சேவையாற்றி வந்த கோபால் 1976 ஆம் ஆண்டு முதல் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு காரணமாக மக்களாகவே அவருக்கு பத்து ரூபாய் வழங்கி மருத்துவம் பார்த்து வந்தனர்
மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரைகளையும் வழங்கி வந்துள்ளார் இந்நிலையில் துணைவியாரை இழந்த மருத்துவர் கோபால் வண்ணாரப்பேட்டையில் கிளினிக்கில் தங்கி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். 77 வயதான மருத்துவர் கோபால் உடல்நலம் சரியில்லாமல் இன்று உயிரிழந்தார். அவருடைய இறப்பு பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் ஐந்து ரூபாய் மருத்துவம் பார்த்து உயிரிழந்த ஜெயச்சந்திரனின் மறைவு மக்களிடையே நீங்காமல் உள்ள நிலையில் மீண்டும் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் கோபால் உயிரிழப்பு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
டாக்டர் கோபால் மறைவுக்கு வண்ணாரப்பேட்டை பகுதி மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 10 ரூபாய் டாக்டர் என்றழைக்கப்படும் சமூகநீதி மருத்துவர் கோபால் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.