வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போட்டாச்சா... பாஜகவுக்கு டி.டி.வி.தினகரன் கேள்வி
திருச்சி: வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததாக அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள டிடிவி தினகரன், திருச்சி அருகேயுள்ள மேலகல்கண்டார் கோட்டையில் பேசியதாவது, பத்தாண்டுகள் மத்திய அரசில் பங்கு பெற்று இருந்த தி.மு.க .தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்றார்.
முன்னதாக, கருத்துக்கணிப்புகள் உண்மை என்றால், திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு திமுக பயந்து ஓடியது ஏன்?. ஆர்.கே நகரில் உங்கள் கருத்துக்கணிப்பு என்ன ஆனது? என்றும் கேள்வி எழுப்பினார்.
அதே போல், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்திற்கென, தனித்துவமான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என கருத்து தெரிவித்தார்.
4 ஆண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்த அரசு, வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலம் நிறைந்த காகிதப்பூ மாலையாக பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.