கோமதிக்கு ரூ.15 லட்சம்.. ஆரோக்கியராஜூவுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி... அதிமுக அறிவிப்பு
கோமதிக்கு ரூ.15 லட்சம்.. ஆரோக்கியராஜூவுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி... அதிமுக அறிவிப்பு
சென்னை: தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு 15 லட்சம் நிதியுதவியை அதிமுக அறிவித்துள்ளது. இதே போல், வெள்ளி வென்ற ஆரோக்கியராஜூவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2019 - சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இதில் 800 மீட்டர் தடகளப் போட்டியில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று நாட்டிற்கு சிறப்பை தேடி தந்துள்ளார். அதே போல், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அரோக்கிய ராஜீவ் வெள்ளிப் பதக்கத்தை தட்டி வந்துள்ளார். இதனால் இருவருக்கும், பல்வேறு அரசியல் கட்சியினர், பிரபலங்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விளையாட்டு வீரர்களை ஊக்கும்விக்கும் விதமாக, அதிமுக சார்பில், தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள செல்வி. கோமதி மாரிமுத்து அவர்களுக்கு 15 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள திரு. ஆரோக்கியராஜீ அவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன், இவர்களின் சாதனைகள் மென்மேலும் தொடர வேண்டும் என மனதார வாழ்த்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு, திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கோமதி மாரிமுத்து குடும்பத்தினரை நேரில் அழைத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காசோலையை வழங்கினார்.
இந்தநிலையில், இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் 5 லட்சத்திற்கான காசோலையை வழங்க உள்ளனர். மேலும், நடிகர் விஜய் சேதுபதி சார்பில் 5 லட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக அரசு உதவி கிடைத்தால் ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வேன் என்று கோமதி மாரிமுத்து கூறியுள்ள நிலையில். தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் தடகள வீராங்கனை கோமதிக்கு, அவர் விரும்புகிற அளவுக்கு உதவியை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.