கூவத்தை சுத்தம் செய்ய ரூ 2300 கோடியில் நிதி செலவு.. ஆனாலும் பலனில்லையே!.. சென்னைவாசிகள் வேதனை
சென்னை: சென்னையில் உள்ள கூவம் ஆற்றை மறு சீரமைப்பு செய்ய தமிழக அரசு ரூ 2300 கோடியை செலவிட்டுள்ளது. எனினும் குப்பைகளும் கழிவுநீரும் சட்டவிரோதமாக ஆற்றில் கொட்டப்படுவதால் கூவத்தை சீரமைக்கும் முயற்சிகளும் அதற்காக செய்யப்பட்ட முதலீடுகளும் வீணாகி வருகிறது.
சென்னை மாநகராட்சியின் ஆணையராக ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் பொறுப்பேற்றவுடன் தலைநகருக்கு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். அதில் நீர் நிலைகள், கால்வாய்களை சுத்தப்படுத்துதல் டிரோன் மூலம் கொசுக்களை அழித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது சென்னை மாநகராட்சி.
சீனாவின் ஆதிக்கத்திற்கு செக்.. தென் சீன கடற்பகுதிக்கு 4 போர் கப்பல்களை அனுப்பும் இந்தியா..பரபர தகவல்
சென்னையில் நீர் வழித்தடங்களில் படித்திருந்த 6,189 மெட்ரிக் டன் கழிவுகளையும் ஆகாயத் தாமரைகளையும் மாநகராட்சி அகற்றியுள்ளது. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநவீர் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை இயந்திர பொறியியல் துறை மூலம் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட அதிநவீன இயந்திரங்களான ரோபோட்டிக் எக்ஸவேட்டர் இயந்திரங்கள் உதவியுடன் ஆகாயத் தாமரைகளும் கழிவுகளும் அகற்றப்பட்டன. அந்த வகையில் 6,189 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சிங்கார சென்னையின் முன்னோடி திட்டங்கள்
இதெல்லாம் சிங்கார சென்னைக்கான முன்னோடி திட்டங்களாகும். அது போல் பெருங்குடி, கொடுங்கையூர் உள்ளிட்ட குப்பைக் கிடங்குகளில் இருந்து சேமிக்கப்படும் குப்பைகளில் உள்ள உணவுக் கழிவுகளை கொண்டு சென்னை மாநகராட்சி இயற்கை உரம் தயாரித்து வருகிறது. மட்கும் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளையும் ஜூலை மாதம் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. நாள்தோறும் 5000 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கிடங்குகளில் கழிவுகள் தேங்குவதை குறைக்க மட்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து அதை விற்பனை செய்கிறது. இதற்காக தினமும் 100 டன் திடக்கழிவுகளை கையாள கூடிய 7 இயற்கை எரிவாயு ஆலைகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் ஒரு ஆலையிலிருந்து மட்டும் 1500 கிலோ இயற்கை உரம், 4000 கிலோ மீத்தேன் எரிவாயுவை தயாரிக்கலாம். இது சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கால்வாயில் தேங்கியுள்ள குப்பை
இந்த நிலையில் ஆங்காங்கே கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றுவது மட்டுமல்லாமல் 23 ஆயிரம் டன் கழிவுகளை மாநகராட்சி அகற்றியுள்ளதாக கூறுகிறது. கூவத்தில் உள்ள 37 கழிவுநீர் வெளியேற்று கால்வாய்களில் 13 கால்வாய்கள் மூடப்பட்டு சேத்துப்பட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டதாக சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவிக்கிறது. நுங்கம்பாக்கம் மற்றும் லாங்க் கார்டன் சாலையில் உள்ள இரு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கழிவுநீரை சேகரிக்க மெட்ரோ வாரியம்
கழிவுநீரை சேகரிக்க மெட்ரோ வாரியம் சார்பில் தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. கழிவுகள் தேங்கும் 80 சதவீத இடங்களை அடையாளம் கண்டு இந்த தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தும் பயனற்று போவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். கூவம் ஆற்றில் சட்டவிரோதமாக கொட்டப்படும் குப்பைகளை திருப்பிவிடப்படும் கழிவுகளை கட்டுப்படுத்த நல்லவொரு திட்டங்கள் இல்லாததால் சென்னை மாநகராட்சியின் திட்டங்கள் பயனற்று போகின்றன.
பெருங்குடி, முகப்பேர்
இதுகுறித்து மெட்ரோ வாரிய அதிகாரிகள் கூறுகையில் பெருங்குடி மற்றும் முகப்பேரில் உள்ள கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷன்களில் தினசரி குறைந்தது 100 தனியார் கழிவு நீர் லாரிகள், கழிவு நீரை கொட்டிச் செல்கின்றன. ஆனால் சிலர் பணம் செலுத்துவதற்காக தயங்கியும் பயண நேரத்தையும் டீசல் செலவையும் மிச்சப்படுத்தவும் இது போல் கூவத்தில் சட்டவிரோதமாக கொட்டி விடுகிறார்கள் என்றார்.
முகப்பேரில் நிற்கும் லாரிகள்
இதுகுறித்து முகப்பேர்வாசி ஒருவர் கூறுகையில் கழிவுநீரேற்றும் லாரிகள் முகப்பேரில் உள்ள ஜார்ஜ் ரத்தினம் சாலையில் வழக்கமாக நிற்கின்றன. அதிலிருந்து நேராக ஆற்றில் கழிவுநீரை விடுகின்றன. இந்த சட்டவிரோத போக்கு குறித்து செய்தித்தாள்களில் செய்திகள் புகைப்படத்துடன் வந்தாலும் காலி மனைகளில் கழிவுநீரை வெளியேற்றிவிட்டு லாரி ஓட்டுநர்கள் தப்பிவிடுகிறார்கள் என்றார்.
லாரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் அண்மையில் லாரி உரிமையாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அதில் கழிவுகளை ஆறுகளில் கொட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். எனினும் தனியார் லாரிகளின் செயல்களை கண்காணிப்பது சற்று கடினமான காரியம் என மெட்ரோ வாரிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
கூவத்தை சுத்தம் செய்ய ரூ 2300 கோடி செலவு
இதனால்தான் கூவத்தை சுத்தம் செய்ய ரூ 2300 கோடி செலவு செய்தாலும் இது போன்று சட்டவிரோதமாக லாரி ஓட்டுநர்கள் ஆற்றிலேயே கொட்டும் கழிவுகளால் பணமும் முயற்சியும் வீணாகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இது போல் சட்டவிரோதமாக செயல்படும் நபர்களின் லாரிகளை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி பொருத்துவது குறித்து ஒரு திட்டம் இருந்தது. ஆனால் அதை மாநில அரசு இன்னமும் செயல்படுத்தவில்லை.
கடும் நடவடிக்கை
கூவமோர வசிக்கும் மக்கள் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இது போல் கழிவுகள் கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுப்படுகிறது. ஆறுகளும் குப்பைகள் தேங்கி வடகிழக்கு பருவமழை வந்தால் மழை நீரை சேமிக்க இயலாமல் கடலில் கலக்கும் நிலை ஏற்படுகிறது. ஒரு காலத்தில் கூவம் நதியில் படகு சவாரியெல்லாம் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். மற்ற நதிகளை போல் கூவமும் துர்நாற்றமில்லாமல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே இயற்கை நமக்கு கொடுத்த கொடையை காப்பது நம் அனைவரின் கடமையாகும்.