நீட் தேர்வு ஆள்மாறாட்டம்.. மும்பை மாணவருக்கு ரூ. 20 லட்சம்.. ஒருவரே பலருக்கு தேர்வு எழுதியது அம்பலம்
Recommended Video
சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் மும்பை மாணவருக்கு ரூ 20 லட்சம் வாங்கியதாக உதித் சூர்யாவின் விவகாரத்தில் கைதான புரோக்கர் தெரிவித்தார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தவர் வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா, தேனி மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது குறித்து புகார் எழுந்தது.
இதுகுறித்து மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து நடந்த ஆய்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரியவந்தது. இந்த ஆய்வுகளுக்கு முன்பாக கல்லூரியை விட்டு வெளியேறிய மாணவர், தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் பதுங்கியிருந்தார்.
திடுக் தகவல்
இந்த நிலையில் அவரும் அவரது தந்தை வெங்கடேசனும் கடந்த புதன்கிழமை திருப்பதியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தேனிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன.
கைது
கேரளாவில் திருவனந்தபுரத்தில் நீட் தேர்வு மையம் நடத்தி வரும் ஜார்ஜ் ஜோசப் கைது செய்யப்பட்டார். அவர் தலைமையில் பெரிய நெட்வொர்க்கே இயங்கி வருகிறது தெரியவந்தது. இதையடுத்து அவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
சோதனை
விசாரணையில் ரூ 20 லட்சம் வாங்கிக் கொண்டு உதித் சூர்யாவுக்கு மும்பை மாணவர் ஒருவரை வைத்து தேர்வு எழுத வைத்ததை ஒப்புக் கொண்டார். மேலும் ரூ 20 லட்சம் வாங்கி கொண்டு ஒருவரே பலருக்கு தேர்வு எழுதியதும் அம்பலமானது. இதையடுத்து ஜோசப்பின் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
விசாரணை
இதுவரை 6 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரியவந்துள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை போல் இன்னும் ஏராளமானோர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.