கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. ரூ.5,000 மாத உதவி தொகை!
சென்னை: அரக்கோணம் அருகே கொலை செய்யப்பட்ட அர்ஜுன், சூர்யாவின் உடல்கள் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம், ரூ.5,000 மாத உதவி தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருவரும் நண்பர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 20), செப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (25). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கடந்த 7-ம் தேதி இரவு பக்கத்து கிராமமான சித்தம்பாடி பகுதியில் மது அருந்தியுள்ளனர்.
கொலை செய்யப்பட்டனர்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இவர்கள் இருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு சிலருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் தொடர்பாக இரு தரப்பினரும் பாட்டில் மற்றும் கத்தி, கட்டைகளால் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் அர்ஜூனன், சூர்யா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உறவினர்கள் போராட்டம்
இந்த சம்பவத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வாலிபர்களின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உடல்கள் ஒப்படைப்பு
இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சோகனுரில் கொல்லப்பட்ட இளைஞர்கள் அர்ஜுன், சூர்யாவின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூர்யா, அர்ஜுன் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம், ரூ.5,000 மாத உதவி தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் நிவாரண காசோலையை வழங்கினார்.