மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ்.. முதல்வரை டேக் செய்து ட்வீட்.. நடந்த அதிசயம்
சென்னை: மனநலம் பாதித்த மகனுக்கு 500 ரூபாயுடன் மருந்து வாங்க சென்றவரிடம், வெளியில் சுற்றியதற்காக 500ஐயும் அபராதம் போட்டு போலீஸார் பறித்தனர். இதனால் வேதனையுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை (cmo) டேக் செய்து பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டார்.
அடுத்த நான்கு மணி நேரத்தில் வீடு தேடி வந்து மருந்தையும் பணத்தையும் போலீசார் கொடுத்து சென்றனர். இதையடுத்து அவர் காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் 24ம் தேதி காலை வரை முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மக்கள் அவசியம் இன்றி வெளியில் சுற்றுவதை தடுப்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் பலர் முககவசம் அணியாமல் சுற்ற தொடங்கினர். இதையடுத்து நேற்று முதல் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கினர். பலரிடமும் அபராதம் வசூலிக்க தொடங்கினர்.
வாழ்த்து மழை.. ஸ்டாலின் இல்லத்தில் குவியும் முக்கியப் பிரமுகர்கள். போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!
வேதனை பதிவு
அப்படித்தான் திருவள்ளூரைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து அதை வசூலித்துவிட்டு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அவர் மனநிலை சரியில்லாத மகனுக்காக மருந்து வாங்கப்போனதாகவும் ஆனால் அதையும் போலீசார் பறித்துவிட்டதாகவும் வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
சிஎம்ஏஓவை டேக் செய்தார்
அவர் தனது பதிவில் சிஎம்ஏஓவை டேக் செய்து, எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது. வேலை வெட்டி இல்லாத இந்தநாளுல குடும்பம் நடத்துவது எவ்ளோ கஷ்டம். மனநலம் பாதிக்கப்பட்ட பையனுக்கு மருந்து வாங்க ₹.500 ரோட அலைஞ்சிகிட்டு இருந்தா இவங்க அதையும் பிடிங்கிட்டு அனுபுராங்க. பையன் சாகட்டும் என்று விட்டுவிட்டேன். என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
காவல்துறையினர் கவனம்
இதை அவர் தனக்கு தெரிந்த பத்திரிக்கையாளர்கள் சிலரிடம் கூறியுள்ளார். பத்திரிக்கையாளர்களும் அதை ரீடுவிட் செய்த போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து அவருக்கு மருந்து வாங்கி தர முன்வந்தனர். சிலர் பணம் கொடுக்கவும் முன்வந்தனர். இந்நிலையில் அவர் ட்விட் போட்ட நான்கு மணி நேரத்தில் நல்லது நடந்துள்ளது.
அரசுக்கு நன்றி
இதனிடையே பாலாஜி இன்று வெளியிட்ட பதிவில், இன்று காலை காவல்துறை மீது என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். பத்திரிக்கையாளர் ஒருவர் என் குறைகளை கேட்டறிந்தது பேராறுதலாக இருந்தது. பின்னர் அதிகாரிகள் பேரன்போடு என்னை அணுகினர். நான்குமணி நேரத்தில் என் மகனின் மருந்தையும் பணத்தையும் வீடு தேடிவந்து கொடுத்துதவிய காவல்துறைக்கும் அரசுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் போலீசார் அவர் வீட்டுக்கே வந்து பணத்தையும் மருந்தையும் கொடுத்த புகைப்படங்கள் உள்ளது.