தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ரூ.621 கோடி செலவாகும் என்கிறார் சத்யபிரதா சாகு
சட்டசபைத் தேர்தல் நடத்துவதற்காக தமிழக அரசிடம் ரூ.621 கோடி கேட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
சென்னை: மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தல் நடத்துவதற்காக தமிழக அரசிடம் ரூ.621 கோடி கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும். தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக ,திமுக கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலை நடத்துவதற்கு ரூ.621 கோடி செலவாகும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கொரோனா காலம் என்பதால் தேர்தல் செலவு அதிகரிக்கக் கூடும். இதனால் தமிழக சட்டசபைத் தேர்தலை சந்திக்க,ரூ.621 கோடி செலவாகும் என்று கூறினார்.
தேர்தல் செலவு தொகையை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். பீகாரை போல தமிழகத்தில் தேர்தலை நடத்த அறிவுறித்தியுள்ளோம். மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் சத்யபிரசாஹூ தெரிவித்தார்.