ஆர்.எஸ்.பாரதி கைது.. "ஒரு வரியில் சொல்லட்டுமா.." டி.ஆர்.பாலு பொளேர்.. வைகோவும் கண்டனம்
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
லோக்சபா உறுப்பினர் டி.ஆர். பாலு இதுபற்றி கூறுகையில், "ஒரே ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், நெருக்கடி காலகட்டத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன் சொன்ன அந்த ஒரு வரி, விநாச காலே விபரீத புத்தி. அதுதான் இப்போதும் பொருந்தும்.
இது அநியாயம், அக்கிரமம், தேவையில்லாத வேலை. கொரோனா தடுப்பு பற்றி தினந்தோறும் திமுக தொண்டர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல தொந்தரவு செய்து கழகத்தினருடைய பணியை முடக்குகிறார்கள்.
காவல்துறைக்கு வேறு வேலை கிடையாதா. அரசு சொன்னதால் காவல்துறை செய்துள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் வருகை தருகிறார்கள். அவர்கள் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
RS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடி கைது.. வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது
வைகோ அறிக்கை
இதுதொடர்பாக, வைகோ, வெளியிட்ட அறிக்கையில், சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்து இருந்தார். தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கருணாநிதி செய்த பணிகளைத்தான் எடுத்துக் கூறியிருந்தேன் என்று தெரிவித்து இருந்தார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் சந்தித்து வருகின்ற ஆயிரக்கணக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண திராணியற்ற அ.தி.மு.க. அரசு, தற்போது ஆலந்தூர் பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தை ஏவி, கைது செய்திருக்கிறது. ஊழல் முகத்திரையைக் கிழிப்பதற்கும், அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து, எதிர்க் கட்சியின் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி வருகிறார். மிசா அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவாசத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட லட்சிய வீரர்தான் ஆர்.எஸ்.பாரதி.
கொள்ளை நோய்
கொரோனா தொற்று எனும் கொடும் கொள்ளை நோய் எங்கும் பரவி உயிர்களைச் சூறையாடி வரும் வேளையில், குற்றமற்ற ஆர்.எஸ்.பாரதியைச் சிறையில் அடைக்க முயல்கிறார்கள். இதுபோன்ற எதேச்சாதிகார நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறது அரசு. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை உணராத அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மீது புனையப்பட்டுள்ள பொய்வழக்கைத் திரும்பப் பெற்று, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார். இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், காங்கிரஸ் கட்சியின், இளங்கோவன் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்களும், கண்டனம் தெரிவித்துள்ளனர்.