வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு- ரத்து செய்ய கோரி ஆர்.எஸ்.பாரதி மனு
சென்னை: தம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திமுக எம்.பி. ஆர் எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் கடந்த பிப்ரவரி 14 ம் தேதி கலைஞர் வாசகர் வட்டத்தின் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், பட்டியலின மக்கள் மற்றும் ஊடகங்கள் குறித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் பட்டியலின மக்களுக்கு எதிரான வகையில் இருப்பதாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி ஆதிதமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆர் எஸ் பாரதி மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தம் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தான் பேசியது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்றும் பேசி ஒருமாதம் கழித்து காவல்நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது , அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
Recommended Video
இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க கோரி நீதிபதி சதிஷ்குமார் முன் திமுக வழக்கறிஞர் நீலகண்டன் அவசர முறையீடு செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை வரும் மார்ச்24 ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தார்.