சளி, காய்ச்சல்.. கொரோனா அறிகுறி.. வீட்டில் தனிமைப்படுத்தியிருந்தபோது ஆர்எஸ் பாரதி கைது!
சென்னை: சளி, காய்ச்சலுடன், 2 நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கைது செய்யப்பட்டுள்ளார், என்று தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நீதிபதிகளுக்கு திமுக பதவி பெற்றுக் கொடுத்தது என்று கடந்த பிப்ரவரி மாதம், திமுக இளைஞரணி கூட்டத்தில், பேசினார் ஆர்.எஸ்.பாரதி. மேலும் ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார்.
இதுதொடர்பாக மார்ச் மாதம், ஆதி தமிழர் பேரவை தலைவர் கல்யாண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்கீழ் இன்று ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.
RS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடி கைது.. வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது
பரந்தாமன்
இதுகுறித்து திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கூறுகையில், ஆர்.எஸ்.பாரதியை ஏதோ ஒரு தீவிரவாதியை போல அதிகாலை வீட்டுக்கு சென்று கைது செய்தது கண்டனத்திற்குரியது. நான் அவரது மனைவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். ஆர்.எஸ்.பாரதிக்கு கடந்த சில நாட்களாக சளி, மற்றும் காய்ச்சல் இருந்தது.
தனிமைப்படுத்தல்
அவருக்கு கொரோனா ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தால், பரிசோதனை செய்ய்பபட்டது. ரிசல்ட் வர வேண்டியுள்ளது. இதையடுத்து தன்னைத்தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்தார். இப்படி ஒரு சூழலில் 75 வயது நபரை போலீஸ் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பயப்படமாட்டோம்
பல சிறைகளை கண்டவர் பாரதி. இந்த பூச்சாண்டிக்கு அவரும் அஞ்சமாட்டார். திமுகவும் அஞ்சாது. இருப்பினும், நாடு போகும் நிலைமையை நினைத்து கவலையாக இருக்கிறது. கொரோனா போன்ற பேரிடர் காலகட்டத்தில், 75 வயது முதியவரை, சிறைச்சாலைக்கு அலைக்கழிக்கிறார்கள். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? இவ்வாறு பரந்தாமன் தெரிவித்தார்.
ஆர்எஸ்பாரதி பேட்டி
ஆர்எஸ் பாரதியும், கைது செய்து அழைத்துச் சென்றபோது, அளித்த பேட்டியில், தன்னைத்தான் தனிமைப்படுத்திக் கொண்டிருந்ததாக கூறியிருந்தார். மேலும், கொரோனா ஊழல் குறித்து பேசியதால்தான், எப்போதோ பேசிய பேச்சுக்கு இப்போது கைது செய்வதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். சர்ச்சைக்குரிய அந்த பேச்சுக்கு ஏற்கனவே பாரதி மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.