ரஜினிசார்..அரசியலில் குதிங்க..அடி எப்படின்னு அப்புறம் பார்க்கலாம்..தேரை இழுத்து தெருவில் விடும் பாஜக
சென்னை: அரசியல் களத்துக்கே வரவிரும்பாத நடிகர் ரஜினிகாந்தை எப்படியாவது இழுத்து ஓட வைத்துவிட வேண்டும் என்பதற்காக பகீர முயற்சிகளில் பாஜக இறங்கியிருப்பதாகவே தெரிகிறது. ரஜினிகாந்தை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி 2 மணிநேரம் சந்தித்து பேசியதும் இதற்காகவே என தெரியவந்துள்ளது.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே ரஜினிகாந்தை சுற்றிய அரசியல் பேச்சுகள் தொடங்கிவிட்டன. 1990களில் இந்த அரசியல் எதிர்பார்ப்புகள் இன்னமும் அதிகமாகின. 1996 சட்டசபை தேர்தலில் வெளிப்படையாக திமுக-தமாகாவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தந்தது முதல் இது உச்சமடைந்தது.
கடந்த 30 ஆண்டுகாலமாக ரஜினிகாந்தின் அரசியல் வருகை பற்றி பேசப்பட்டு வருகிறது. ஆனால் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் தேர்தல் அரசியல் களத்துக்கு வரலாம் என்கிற தைரியமே ரஜினிக்கு வரவழைக்கப்பட்டது. இதனால் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என ரஜினிகாந்த் அறிவித்தார்.
ரஜினிக்கு கடும் எதிர்ப்பு
தேர்தலில் போட்டியிடுவோம் என ரஜினிகாந்த் அறிவித்தாலும் அரசியல் கட்சி தொடங்கவே இல்லை. அதற்குள் ரஜினிகாந்த் முன்வைத்த அத்தனை கருத்துகளும் தமிழகத்தில் மிக மோசமான எதிர்ப்புகளை எதிர்கொண்டன. ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு வெகுதொலைவில் இருந்ததையே இது அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
கொரோனாவால் கேள்விக்குறி
இதனால் என்னதான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் பாஜகவுக்கு என்ன கதியோ அதேநிலைதான் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்றாகிப் போனது. இருந்தபோதும் ரஜினிகாந்தை அரசியலில் தள்ளிவிட பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டனர். இதனிடையே கொரோனா பரவல் வந்த நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி தொடங்குவது என்பது பெரும் கேள்விக்குறியானது.
கடிதமும் ரஜினி நிலைப்பாடும்
இதற்கு ஏற்ப கொரோனா, ரஜினிகாந்த் உடல்நிலை ஆகியவற்றை முன்வைத்து ஒரு கடிதம் முன்னரே வெள்ளோட்டமாக கசியவிடப்பட்டது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்தே அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், அரசியல் களத்தில் குதிப்பதில் இருந்து பின்வாங்க உள்ளதை சூசகமாக கோடிட்டு காட்டியிருந்தார் ரஜினிகாந்த். இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல அவரை வைத்து திராவிட அரசியலுக்கு சமாதி கட்டலாம் என கனவு கண்டவர்களும் தூக்கத்தை தொலைத்துவிட்டனர்.
குருமூர்த்தி-ரஜினிகாந்த் சந்திப்பு
இந்நிலையில்தான் ரஜினிகாந்தை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவரும் துக்ளக் ஆசிரியருமான எஸ். குருமூர்த்தி சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் 2 மணிநேரம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அரசியலுக்கு வர விரும்பாத ரஜினிகாந்தை பலவகைகளில் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில்தான் இந்த சந்திப்பு நடந்ததாக கருதப்படுகிறது.
ரஜினியை தள்ளிவிடுகிறார்கள்
குதித்தால் மிக மோசமான எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதை நன்றாக புரிந்து கொண்டே ஒதுங்கி இருக்கிறார் ரஜினிகாந்த். சும்மா குதித்து பாருங்க.. அடி எங்க படுதுன்னு அப்புறம் பார்க்கலாம் என்கிற ரேஞ்சுக்கு பாஜக தரப்பு, ரஜினிகாந்தை இழுக்க முயற்சிக்கிறது. நிச்சயம் காயம் என்னவோ ரஜினிகாந்துக்கு; பாஜகவைப் பொறுத்தவரை லாபமும் நட்டமும் இல்லை.. ஒரு முயற்சிதான் என நினைக்கிறது. அந்தோ பரிதாபம்!