ஆர்எஸ்எஸ் பேரணி...தமிழகத்தில் நவ.6 ல் நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி..மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு
சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால் காவல்துறை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஜயதசமி, 75-வது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து செப்டம்பர் 28க்குள் அனுமதி தொடரபாக தமிழக அரசு முடிவு எடுக்க உத்தரவிட்டிருந்தது.
ஆனால் மத நல்லிக்கணத்தை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி தரக் கூடாது; இந்த ஊர்வலத்துக்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஒரு மனுத் தாக்கல் செய்தார். இதனை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்.இயக்க அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊர்வலத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது; அக்டோபர் 2-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்து கட்சிகளும் பங்கேற்பதாக அறிவித்திருந்த சமூக நல்லிணக்கப் பேரணி உள்ளிட்டவைக்கும் அனுமதி இல்லை என அறிவித்தது தமிழக போலீஸ்.
இதனையடுத்து திருவள்ளூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதிக்காததை எதிர்த்து உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஆர்எஸ்எஸ் கலவரங்கள் செய்ததில்லை.. பேரணிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது.. கொந்தளிக்கும் பொன்னார்!
மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால் காவல்துறை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றையும் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.இயக்க ஊர்வலத்துக்கு அனுமதி தருவது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.