ஆர்.எஸ்.எஸ்-க்கு தமிழகத்தில் என்ன வேலை? - இங்கு எந்த ஊர்வலமும் நடத்த கூடாது - திருமாவளவன் உறுதி!
சென்னை: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு வேலை இல்லை என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இங்கு அவர்கள் பேரணி நடத்தக் கூடாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மனித சங்கிலி அமைத்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கே வழி காட்டிய மகத்தான தலைவர் காமராஜர் என்று தெரிவித்தார். புதிய, புரட்சிகரமான இந்தியாவை, ஜனநாயக இந்தியாவை கட்டமைக்க, தம்மை முழுமையாக ஒப்படைத்து கொண்டவர் மாமனிதர் காமராஜர். அவரின் நினைவு நாளில், சனாதன அரசியலை தமிழகத்தில் ஒரு நாளும் நுழைய விட மாட்டோம் என விசிக உறுதி ஏற்கிறது.
காமராஜர் தெரியும்.. “காந்தி” குடும்பம் அல்லாத யாரெல்லாம் காங்கிரஸ் தலைவராகி உள்ளார்கள் தெரியுமா?
ஆர்.எஸ்.எஸ் இயக்கம்
பயங்கரவாத அணுகுமுறை அரசியலை கொண்ட இயக்கம் தான் ஆர் எஸ்.எஸ். அது, கலாச்சார இயக்கம் என்ற போர்வையில் இயங்கி கொண்டிருக்கிறது. சாகா என்கிற பெயரில் ஆயுத பயிற்சி வழங்குகிறார்கள். மக்களுக்கு தொண்டு செய்வதை விட வன்முறையை தூண்டி வருகிறது. இந்து அல்லாதவர்களை அந்நியர்கள் என்கிற வெறுப்பை விதைக்கிறது. இது மிக ஆபத்தான அரசியல்.
தமிழகத்திற்கு குறி
இந்த ஆபத்தில் இருந்து தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இப்போது தமிழ்நாட்டை குறிவைத்து விட்டனர். ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதாக அறிவித்த அன்று, ஜனநாயக சக்திகள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்த அறிவித்தோம். ஆனால், காவல்துறை பொத்தாம் பொதுவாக யாருக்கும் அனுமதி இல்லை என கூறியது.
சமூக நல்லிணக்க மனித சங்கிலி
வரும் 11 ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி, திட்டமிட்டபடி நடைபெறும் என நம்புகிறோம். இந்த மண் காமராஜர் போன்றவர்களால் பண்படுத்தப்பட்ட மண். இந்த மண்ணில் சனாதன அரசியலுக்கு இடமில்லை என்பதை உணர்த்த, இந்த அறப்போர் நடைபெறும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் பங்கேற்க வேண்டும்.
நேரு - படேல்
ஆர்.எஸ்.எஸ்-ஐ, முன்னாள் பிரதமர் நேரு அழிக்க நினைத்ததாக எல் முருகன் கூறியது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், நேரு ஒரு ஜனநாயக சக்தி. மனித நேயம் மிக்கவர். அவரே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என நினைத்தால், அது எவ்வளவு ஆபத்தான இயக்கம் என புரிந்து கொள்ளுங்கள். அதேபோல் சர்தார் வல்லபாய் பட்டேல், அவரது வாயால் ஆர்எஸ்எஸ் இயக்கம் வளர்வது ஆபத்து, அதனால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறி, அந்த இயக்கத்திற்கு தடை விதித்தார்.
ஆர்.எஸ்.எஸ் பேரணி
காமராஜர் தூங்கி கொண்டிருந்த போது அவரை கொலை செய்ய முயற்சித்தார்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர். காந்தியை சுட்டு கொன்ற கும்பல் ஆர்எஸ்எஸ். அது தமிழ் நாட்டில் வாலாட்ட பார்க்கிறது என்றால், வாலை சுருட்டிகொள்ள வேண்டும் என எச்சரிக்கிறோம். தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸுக்கு வேலை இல்லை. அவர்கள் பேரணி நடத்தக்கூடாது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
அரசுக்கே அதிகாரம் உள்ளது
ஆர் எஸ் எஸ் பேரணி குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க கூடாது. சட்ட ஒழுங்கை தீர்மானிக்கும் ஆற்றல் அரசுக்கு தான் உள்ளது. கொள்கை முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் அரசுக்கு தன உள்ளது. அரசு விரும்புகிறப்படி தான் மற்ற துறைகள் இயங்க வேண்டும். நீதி மறுக்கின்ற இடத்தில் தான், நீதிமன்றம் அதிகாரத்தை செலுத்த வேண்டும். ஒரு பாசிச வன்முறை இயக்கத்திற்கு பேரணி நடத்த, அனுமதி தர வேண்டும் என அரசை நீதிமன்றம் எச்சரிப்பது எந்த வகையில் நியாயம் என திருமாவளவன் தெரிவித்தார்.