நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி அத்துமீற வாய்ப்பு: உயர் நீதிமன்றம் தலையிட ஜெயக்குமார் மனு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியின் தலையீடு இருக்கும் என்பதால தேர்தலை நியாயமாக நடத்தக் கோரியும், மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக அளித்த மனுவை பரிசீலித்து அதனை அமல்படுத்த உத்தரவிடக் கோரியும் அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 15 மாநகராட்சிகளில் உள்ள 1064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள 3468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள 8288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
அவரது மனுவில், "ஊரக உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த கோரி அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளித்ததோடு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் விளைவாக அனைத்து வாக்கு சாவடி, வாக்குப்பெட்டி வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்த போதும், ஆளுங்கட்சிக்கு சாதகமான வகையில் பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறியது.
குறிப்பாக,உரிய காரணமின்றி அதிமுக வினரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது. ஆளும்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் அலுவலர்களோடு அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் நடத்தி ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தப்பட்டனர்.
அதிமுகவை சேர்ந்தவர்கள் கடைசிவரை முன்னிலையில் இருந்த இடங்களில் கூட ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விதிமீறல்களால் மாநில தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி ஆளுநரிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஜனவரி 2022 க்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்பதால், ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று தற்போதும் விதிமீறல் நடைபெற்றுவிட கூடாதென கருதி கடந்த நவம்பர் 1 ஆம் தேதி அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தோம்.
தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும், தேர்தல் நடவடிக்கைகள் முழுதும் சிசிடிவி பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் அல்லது வெளிமாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது ரிசர்வ் படையை பயன்படுத்த வேண்டும். என கோரப்பட்டது. தற்போதைய ஆளுங்கட்சியான திமுக 2006 - 2007 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
உயர்நீதிமன்றம் தலையிட்டு ஒரு வார்டின் தேர்தலை நிறுத்தி உத்தரவிட்டது. தற்போது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரீசிலித்து அதனை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கோரியுள்ளார்.