தீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை
இன்று செவ்வாய் கிழமை பிரதோஷம் சிறப்பானது. மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் கடன் தொல்லைகளை நீக்கக் கூடிய பிரதோஷம். இன்று சிவ தரிசனம் செய்வதால் கடன் தொல்லைகள் நீங்கும் நோய்கள் விலகும்.
சென்னை: கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையால் தவிக்கிறீர்களா? தீராத நோயினால் அவதிப்படுகிறீர்களா ருண விமோசன பிரதோஷ தினமான இன்று சிவ ஆலயம் சென்று நந்தி, சிவபெருமானை தரிசனம் செய்து வாருங்கள் நோய், கடன் தொல்லை பாதிப்புகள் குறையும்.
சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம் என ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள் வருகின்றன. இன்று சுக்ல பட்ச பிரதோஷம். வளர்பிறை பிரதோஷம். பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.
செவ்வாய்கிழமை பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்வதால் மனிதனுக்கு வரும் ருணம், கடன் தொல்லை, எதிரி தொல்லைகளை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும்.
அக்டோபர் சந்திராஷ்டம நாட்கள் : 12 ராசிக்காரர்களும் இந்த நாட்களில் ரொம்ப கவனமாக இருங்க
எந்த நாளில் என்ன பிரதோஷம்
ஞாயிற்றுக் கிழமை வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம் அல்லது ருண விமோசன பிரதோஷம் ஆகும். புதன்கிழமை வரும் பிரதோஷம் புதவாரப் பிரதோஷம் என்றும், வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவாரப் பிரதோஷம் என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் சுக்ர வாரப் பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. இது எல்லாவற்றையும் விட சிறப்பு வாய்ந்தது சனிக் கிழமையில் வரும் பிரதோஷம்தான். இந்த பிரதோஷத்தைத்தான் மகா பிரதோஷம் என்று அழைக்கின்றனர்.
இறைவனின் தரிசனம்
பிரதோஷ நேரமான மாலை 4:30 மணி முதல் 6:30 மணிவரை, உலகில் உள்ள அத்தனை தேவதைகள், தெய்வங்களும், நேர்மறை எண்ணம் கொண்ட சக்திகள், சித்தர்கள் சிவ ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை தரிசிப்பதாக ஐதீகம். அந்த நேரத்தில் நாம் கோயிலில் எந்த வேலையாவது செய்தால், அவர்களின் பார்வை நம் மேல் படும், நம் வாழ்வின் பிரச்சினைகளும் நீங்கும்.
அருகம்புல் வில்வ இலை
பிரதோஷ நேரத்தில் நந்தி, சிவபெருமானுக்கு நடைபெறும் அர்ச்சனையின் போது நாம் அருகம்புல் நந்திக்கும் வில்வ இலை சிவனுக்கும் வாங்கிக் கொடுக்கலாம். பசும்பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல நன்மைகளும் கிடைக்கும். நெய், சந்தனம், பன்னீர் என அவரவர்கள் வசதிக்கு ஏற்ப வாங்கிக்கொடுக்கலாம்.
தும்பைப்பூ மாலை
தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
செவ்வாய்கிழமை பிரதோஷம்
செவ்வாய் திசை நடப்பவர்கள்,செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ,விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசிரிடம் ,சித்திரை, அவிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செவ்வாய் கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவ ஆலயம் சென்று நந்தி, சிவன் தரிசனம் செய்யவேண்டும்.
ருணம் போக்கும் வழிபாடு
எந்த ராசி நட்சத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது எதார்தமான உண்மையாகும்.