சாக்கடையில் கட்டுக்கட்டாக பணம்..! அள்ளிச்சென்ற பொதுமக்கள்... ஆவடியில் பரபரப்பு
ஆவடியில் உள்ள குடியிருப்பு பகுதியான, பக்தவச்சலபுரம் 2-வது தெருவில் சாலை ஓரத்தில் செ.ல்லும் கழிவு நீர் கால்வாயில், நேற்று காலை 9 மணி அளவில் திடீரென ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மிதந்து வந்தன. 5, 10, 20, 100 ரூபாய் நோட்டுகளாக பணம் மிதந்து வந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள், போட்டி போட்டுக்கொண்டு பணத்தை அள்ளிச்சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசை பார்த்த பொதுமக்கள் கிடைத்த வரை லாபம் என்று நினைத்து, கையில் இருந்த பணத்துடன் தப்பி ஓடி விட்டனர்.
ஆவடி நகராட்சி துப்புரவு பணியாளர்களின் உதவியுடன், கால்வாயில் மேலும் பணம் இருக்கிறதா? என்று சோதனையிட்டனர். அதில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. பொதுமக்கள் எவ்வளவு பணத்தை அள்ளிச்சென்றனர் என்று தெரியிவில்லை.
கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட 5 ஆயிரம் ருபாய் பணம் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சாக்கடையில் திடீரென பணம் எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கால்வாயில் மிதந்து வந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த திருட்டுப்பணமா? அல்லது வருமான வரித்துறை சோதனைக்கு பயந்து பணம் பதுக்கப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.