ஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்
கல்கி ஆசிரமத்தில் 500 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: விஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லி கொண்ட கல்கி பகவானின் கல்வி நிறுவனமான கல்கி ஆசிரமத்தில் இருந்து 500 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கல்கி ஆசிரமத்தில் முதல்நாள் பிடிபட்டது ரூ. 33 கோடி என்ற நிலையில், 2 வது நாள் சோதனை முடிவில் அது 500 கோடியாக மலைபோல் உயர்ந்து நிற்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி நிறைந்த வியப்பில் உள்ளனர்!
ஆந்திர மாநிலம் நெகமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார்தான் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் ஆரம்பத்தில் எல்ஐசி ஏஜெண்டாக இருந்தவர். இதற்கு பிறகுதான் சாமியாராக மாறி, கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தார். தன் பெயரையும் கல்கி பகவான் என்றும் சூட்டிக் கொண்டார்.
அவதாரம்
திடீரென ஒரு நாள் தன்னை ஒரு கடவுளாகவும் அறிவித்துகொண்டார். அதாவது தன்னை விஷ்ணுவின் அவதாரம் என்றும் இனிமேல் தன்னுடைய பெயர் கல்கி பகவான் என்றும் பகிரங்கமாக சொல்ல தொடங்கினார். இவர் கல்கி பகவான் ஆகிவிட்டதால், இவரது மனைவி பத்மாவதி "அம்மா பகவான்" ஆகிவிட்டார்.
செக்ஸ் புகார்கள்
எப்போது சித்தூரில் ஆசிரமத்தை ஆரம்பித்தாரோ, அப்போதே பக்தர்கள் பெருக்கெடுத்து வர ஆரம்பித்து விட்டனர். இந்த ஆசிரமத்தில், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் உள்ளனர். எத்தனையோ பேர் இந்த ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கியும் உள்ளனர். 7, 8 வருடத்துக்கு முன்பு இந்த ஆசிரமம் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பியது. அது சம்பந்தமான வீடியோக்கள் கூட வெளியே வந்து விசாரணையும் நடந்தது. அந்த பரபரப்பு ஓய்ந்த நிலையில் திரும்பவும் கல்கி ஆசிரமம் விவகாரத்தில் சிக்கி உள்ளது.
மகன் கிருஷ்ணன்
சாமியாருக்கு கொஞ்ச நாளாக உடம்பு சரியில்லாத காரணத்தினால் , அவரது குடும்பத்தினர்தான் இந்த ஆசிரமத்தை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சாமியார் மகன் கிருஷ்ணாதான் எல்லா ஆசிரம பொறுப்பையும், கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த ஆசிரமத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் நிதி வழங்குவதாக கூறப்படுகிறது.
பக்தர்கள்
அதனால் கிருஷ்ணா, வரி ஏய்ப்பு செய்ததாகவும், பணப்பரிவர்த்தனைகளை மறைத்ததாகவும் புகார் வெளிவந்தது. அது மட்டும் இல்லை.. பக்தர்கள் நன்கொடை மூலம் திரட்டப்பட்ட பணத்தை வைத்து ரியல்எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். இதற்கும் கிருஷ்ணன்தான் முழு பொறுப்பு. வேலூரில் 1000 ஏக்கர் நிலம் இவர்களுக்கு இருக்கிறதாம். இதைதவிர, ஆப்பிரிக்க நாடுகளில் பல சொத்துக்கள் இருக்கிறதாம்.
சோதனை
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலக் கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் நேற்று முன்தினம் காலை முதலே அதிகாரிகள் ரவுண்டு கட்டி சோதனையை நடத்தினர். இந்த புகாரின் பேரிலேயே தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என 40 இடங்களில் சோதனை நேற்று நடந்தது. சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கிருஷ்ணாவின் ஆபீசிலும் சோதனை நடந்தது.
500 கோடி ரூபாய்
இந்த சோதனை அன்று மாலை முடிந்தநிலையில், 24 கோடி இந்தியப் பணத்தினை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. மேலும் 9 கோடி அமெரிக்க டாலரும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கு முறையான எந்த ஆவணங்களும் இல்லை என தெரிகிறது. இதைதவிர வெளிநாட்டுப் பணமும் சிக்கியுள்ளது. இதனால் அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கப் பிரிவு சோதனையும் நடைபெற்றது. இப்போது கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் இருந்து 500 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்களாம்.
கல்கி பகவான் மகன்
இவர்தான் பகவான் ஆயிற்றே.. முதலில் கடவுளின் பகவானுக்கு எதற்கு சொத்துக்கள்? அப்படியே இருந்தாலும் இந்த சொத்துக்கள் எப்படி கிடைத்தன? என்பதெல்லாம் நமக்கு புரியவே இல்லை. கணக்கில் காட்டாத பணம், ஆந்திராவில் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்காவில் நிலம் என வரிசை கட்டி சொத்துக்களை குவித்துள்ள கல்கி பகவானின் மகனை போலீசார் இனிமேல்தான் கவனிப்பார்கள் என்று தெரிகிறது.