ஊரக உள்ளாட்சி தேர்தல்.. இதுதான் அரசியலின் அடி நாதத்தையே மாற்ற போகும் மிகப்பெரிய ஆயுதம்!
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் எவ்வளவு முக்கியமானது தெரியுமா? கிராம வார்டு கவுன்சிலர்களும், ஊராட்சி தலைவர்களுமே இந்திய ஜனநாயகத்தின் தூண்கள்.. இவர்களை மட்டும் சரியாக தேர்ந்தெடுத்துவிட்டால் எல்லாமே மாறிவிடும்.
பண பலம் அதிகாரம் எல்லாவற்றையும் சாமானிய மக்களால் சாய்க்க முடியும் என்றால்.. அதற்கு வார்டு கவுன்சிலர் டூ ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளை கைப்பற்ற வேண்டும்.. இதுதான் அரசியலின்அடி நாதத்தையே மாற்ற போகும் மிகப்பெரிய ஆயுதம் என்பது பலருக்கும் தெரிவது இல்லை.
ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தலை நம்மூரில் சாதாரண நிகழ்வாக கடந்துவிடுகிறார்கள். நேர்மையான அரசியலை விரும்பும் பலருக்கும் இந்த தேர்தலில் இறங்கி வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமோ அல்லது அதில் நல்லவர்களை நிறுத்த வேண்டும் என்ற ஆசையோ நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
ஊராட்சி தலைவர்
ஏனெனில் ஊரக மற்றும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு பதவிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் பதவிகள் என்பது மிக முக்கியமான பதவி. இதில் காலம் காலமாக அரசியலில் உள்ளவர்களே இறங்குகிறார்கள் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களே இதில்வெற்றியும் பெறுகிறார்கள். உண்மையில் இந்த பதவிகளை வெல்ல பணபலமோ, அரசியல் செல்வாக்கோ பெரிதாக தேவையில்லை.
வெற்றி பெறலாம்
என்னால் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று தெரிந்த நண்பர்கள் உறவுகள் மற்றும் மக்களிடம் எடுத்துரைத்தாலே வெற்றி பெறலாம். மக்கள் உள்ளூர் வேட்பாளரை தேர்வு செய்யும் போது ஒரு போதும் கட்சிகளை பார்க்க மாட்டார்கள். எனவே தாராளமாக பலரும் ஆர்வமுடன் இறங்கலாம்.
அரசியல் அடிநாதம்
நேர்மையான சரியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றால் கிராமங்களில் இருந்து தான் துவங்கப்பட வேண்டும். சரியான நேர்மையான நபர்கள் வார்டுகளையும் பஞ்சாயத்து தலைவர் பதவிகளை மொத்தமாக கைப்பற்றினால் நிச்சயமாக இப்போது போகும் அரசியல் அடிநாதத்தையே மாற்றிவிட முடியும்.
நம்பிக்கை
வெறும் பணத்தை காட்டியோ பரிசு பொருளை காட்டியோ உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது சாத்தியமே இல்லாதது. ஏனெனில் கிராமபுறங்களில் வெற்றி பெற மக்களுக்காக பாடுபடுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர்களே வெற்றி பெற முடியும்.
10 ஆயிரம் பதவிகள்
எனவே கிராமப்புறங்களில் இன்றைய இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் களம் இறங்கினால் மாற்றத்தை உருவாக்கிவிட முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி யாருக்குமே ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் 27 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 10 ஆயிரம் பதவிக்கு மேல் தேர்தலில் ஒருவரை தவிர யாருமே போட்டியிடவில்லை. போட்டியின்றி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் தாங்களே முன்வந்து அரசியலில் களம் கண்டால்தான் மாற்றம் உண்டாகும்.
சினிமா ஹீரோ
ஜீபூம்மா என மந்திரம் போட்டு மாற்றுவதோ, சினிமாவில் வரும் ஹீரோ மாதிரி யாரோ ஒருவர் வந்தால் எல்லாம் மாறிவிடும் என்று நம்புவதோ முட்டாள் தனமானது. நீங்கள் விரும்பிய மாற்றங்களை உங்கள் வீட்டில் செய்வதாகட்டும், உங்கள் தெருவில் செய்வதாகட்டும், ஊரில் செய்வதாகட்டும் எல்லாவற்றுக்குமே அதிகாரத்தை கைப்பற்றுவது ஒரே வழி. அரசியலில் இறங்காமல் நீங்கள் உங்கள் பிரச்சனைகளை மாற்ற முடியும் என்று நினைத்தால் இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் வேடிக்கைதான் பார்க்க முடியும். இங்கே அதிகாரம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். அதற்கு தான் அரசியல் கட்சிகள் யானை பசியோடு சுற்றி வருகின்றன.