சென்னையிலிருந்து புயல் தூரத்தில் இருந்தாலும் கனமழை ஏன்.. ரமணன் விளக்கம்.. சிரபுஞ்சி டெக்னிக்தான்!
சென்னை: சென்னையிலிருந்து 300 கி.மீ. தூரத்தில் புயல் நிலை கொண்டிருந்தாலும் மலைப் பகுதிகள் நிறைந்துள்ளதால் அதன் மீது ஈரக்காற்று பட்டு வேகம் எழும்பி புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என வானிலை மையத்தின் இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரமணன் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கஜா, தானே புயலின் போது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அதே போன்ற காற்றுதான் நிவர் புயலின் போதும் வீசும் என சொல்லப்பட்டுள்ளது.
ஆகையால் கஜா புயல் அளவுக்கு நிவர் புயலும் தாக்கத்தை ஏற்படுத்தும். புயல் கரையை கடக்கும் இடத்திற்கு அண்மை பகுதி என பார்த்தால் அது புதுச்சேரிதான்.
நிவர் புயல்... களத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின்... முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று ஆய்வு..!
240 கி.மீ. தூரம்
அங்கும் உள்மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, என வடக்கு நோக்கி செல்லும் மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு இருக்கும். இந்த மழையும் காற்றும் புயல் கரையை கடந்த பிறகு வேகம் குறையும். கடலூரிலிருந்து 240 கி.மீ. தூரத்தில் புயல் நிலைக் கொண்டிருக்கிறது.
ஈரக்காற்று
சென்னையிலிருந்து 300 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. ஆனால் கடலூரில் சாரல் மழையே பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மலை அமைப்பு இருப்பதால்தான். கடலில் இருந்து வரும் ஈரக்காற்று மலையின் மீது மோதி அதிகமாக எழும்புவதால் மலை இருக்கும் பகுதிகளில் கனமழை பெய்கிறது.
உயர் அடுக்கு மேகங்கள்
இந்த நிவர் புயல் காற்றும் மழையும் கலந்த ஒரு Rain Storm ஆகும். காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால் புயல் புதுவை அருகே கரையை கடக்கும். இதனால் புதுவைக்கு அருகே உள்ள பகுதிகளில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். புயலின் கண் பகுதி என்பது ஒரு சில புயல்களில் தெரியும். ஒரு சிலவற்றில் தெரியாது. அதற்கு காரணம் உயர் அடுக்கு மேகங்கள் மறைப்பது.
கடலோர மாவட்டங்கள்
உள் மாவட்டங்களில் பாதிப்பு இருக்காது என எடுத்துக் கொள்ளக் கூடாது. கடலோர மாவட்டங்களில் மின் கம்பங்கள், மரங்கள் தொலைத் தொடர்பு சாதனங்கள் வளைந்து போகும் , படகுகள் நகரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் உள் மாவட்டங்களில் மின்சாரம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவை துண்டிக்கப்படும்.
மழை
புயலின் மையப் பகுதி வந்தவுடன் காற்றும் குறையும் மழையும் குறையும். எனவே கடலோர மாவட்டங்களை போல் உள்மாவட்டங்களில் வசிக்கும் மக்களும் தாழ்வான பகுதிகளிலிருந்து மேடான பகுதிக்கு செல்ல வேண்டும். பேட்டரி, மெழுகுவர்த்தி ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
அதி தீவிர புயல்
புயல் கரையை கடந்தாலும் அதி தீவிர புயலாக இருந்த அது தீவிர புயலாக, ஆழ்ந்த காற்றழுத்தமாக, குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறிவிடும். எனினும் சென்னைக்கு மேற்கே வங்கக் காற்று ஈர்க்கும் என்பதால் புயலுக்கு பிறகும் மழை தொடரும். தமிழகத்தில் இதுவரை 24 செ.மீ. மழையே இந்த 3 மாதங்களில் பதிவாகியுள்ளது. ஆனால் 44 செ.மீ. மழை தேவைப்படுகிறது. அப்போது மீதமுள்ள 20 செ.மீ. மழை இந்த ஆண்டுக்குள் பெய்தாக வேண்டும் என்றார்.
புறநகர் பகுதிகள்
சிரபுஞ்சியில் ஏன் மழை அதிகமாக பெய்கிறது என்பதற்கு காரணமும் வங்கக் கடல் காற்று வங்கதேச எல்லையில் இருக்கும் சிரபுஞ்சி மலை பகுதிகளில் நேராக போய் மோதுவதால் அப்பகுதியில் எப்போதும் மழை பெய்கிறது. வங்கதேசத்தில் மலைகளே இல்லாததால் அங்கு மழை அந்த அளவுக்கு பெய்வதில்லை. இந்த வியூகம்தான் தற்போது சென்னை புறநகர் பகுதிகளுக்கு பொருந்துகிறது.