நிலக்கோட்டையில் மீண்டும் களம் காணும் எஸ்.தேன்மொழி எம்.எல்.ஏ - பயோடேட்டா
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நிலக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேன்மொழி எம்.எல்.ஏ குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழகத்தில் இன்னும் முழுதாக ஒரு மாதம் கூட இல்லை சட்டமன்ற தேர்தலுக்கு. ஏப்ரல் 6ம் தேதி மக்கள் அடுத்த 5 வருடத்திற்கான தங்கள் தலையெழுத்தை நிர்ணயிக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த கால இடைவெளியில் எத்தனை குட்டிக் கரணம் அடிக்க முடியுமோ, ஜிம்னாஸ்டிக்ஸ், ஜிம்மிக்ஸ் செய்து விட முடியுமோ, அத்தனையையும் செய்ய கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஆளும் அதிமுக முதற்கட்டமாக ஆறு பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகமும், சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதனும், நிலக்கோட்டை தனிதொகுதியில் எஸ். தேன்மொழியும் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை தொகுதியில் ஒரு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், "வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தேன்மொழி போட்டியிட்டு 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று அடித்துக் கூறினார். அந்த அளவுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் தீவிர ஆதரவாளரான தேன்மொழிக்கு மீண்டும் நிலக்கோட்டை (தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்
முதன்முறையாக 2006ம் ஆண்டு அதிமுக சார்பில் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்ற தேன்மொழி, பிறகு 2019ல் நடந்த இடைத் தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பாக களம் கண்டு வெற்றிப் பெற்றார். மொத்தம் 90,982 வாக்குகள் பெற்ற தேன்மொழி, 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். திமுகவின் செளந்தரபாண்டியன் 70,307 வாக்குகள் பெற்றார்.
செய்தது என்ன?
இடைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு, அணைப்பட்டியில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியது, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தொகுதிக்குட்பட்ட கிராமங்களை இணைக்கும் பணிகளை மேற்கொண்டிருப்பது, சேவுகம்பட்டி பேரூராட்சியை வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் இணைக்கும் பணிகளை மேற்கொண்டிருப்பது, நிலக்கோட்டை மின் மயானம், நவீன பேருந்து நிலையம் தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருப்பது என்று இரண்டு ஆண்டுகளில் இவரது செயல்பாடுகள் குறித்து சாஃப்ட் அணுகுமுறை இருக்கிறது. அதேசமயம், தொகுதிப் பக்கம்கூட எம்.எல்.ஏ-வை அதிகம் காண முடிவதில்லை உள்ளிட்ட சில குறைகளும் ஆங்காங்கே வைக்கப்படுகிறது.
சமாளிப்பாரா தேன்மொழி?
இந்த தொகுதியில் காங்கிரஸ் நின்றால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் ஐ-பேக் அறிக்கை கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், முன்னாள் நிலக்கோட்டை எம்.எல்.ஏ., பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி, நிலக்கோட்டை பகுதியில் தேர்தல் பணியை துவக்கி உள்ளார். சமாளிப்பாரா தேன்மொழி?