என்னை விமர்சிப்பதா.. கராத்தே தியாகராஜனை கண்டிக்கிறேன்.. திருநாவுக்கரசர் ஆவேசம்
சென்னை: என்னை விமர்சிக்கும் கராத்தே தியாகராஜனை கண்டிக்கிறேன் என திருச்சி எம்பி திருநாவுக்கரசர் ஆவேசமடைந்தார்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு அதிமுக அரசு தீர்வு காணவில்லை என கூறி இன்று தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கே என் நேரு தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில் தென் சென்னையில் 35 வட்டங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறியிருந்தார். உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து நின்றால் நன்றாக இருக்கும். திமுக தனித்து நிற்க வேண்டும் என கட்சி தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்துவோம்.
பல்லக்கு தூக்குவது
எத்தனை நாளுக்குத்தான் காங்கிரஸ் கட்சி பல்லக்கு தூக்குவது? இது என்னுடைய கருத்து, திமுகவினுடைய கருத்து இல்லை என கூறியிருந்தார். இது திமுக, காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
கராத்தே தியாகராஜன்
இந்த நிலையில் திருச்சியில் தனது சொந்த செல்வாக்கின் மூலம் நான் வெற்றி பெற்றேன் என காங்கிரஸ் கட்சியின் திருச்சி எம்பி எஸ் திருநாவுக்கரசர் கூறியதால்தான் காங்கிரஸ் மீது திமுகவுக்கு அதிருப்தி நிலவுகிறது என கராத்தே தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
அதிருப்தி
இதற்கு திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும். கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும். திமுக என் மீது எந்த அதிருப்தியிலும் இல்லை.
தமிழக முதல்வராவார்
என்னுடைய செல்வாக்கால்தான் வெற்றி பெற்றேன் என எங்கேயும் நான் தெரிவிக்கவில்லை. என்னுடைய கருத்து திமுகவில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கராத்தே தியாகராஜன் கூறியது கண்டனத்துக்குரியது. கே என் நேரு என்ன சூழ்நிலையில் பேசினார், எதற்காக பேசினார் என தெரியவில்லை. மக்கள் விரும்பும் கூட்டணியில் போட்டியிட்டு ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்ராவார் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.