ட்விட்டரில் எதுக்கு கருத்து போடணும்.. எதற்கு நீக்கணும்.. முதல்வரிடம்தான் கேட்கணும்.. திருநாவுக்கரசர்
சென்னை: ட்விட்டரில் எதுக்கு கருத்து போட வேண்டும், பின்னர் எதற்காக அதை எடுக்க வேண்டும் என முதல்வரிடம்தான் கேட்க வேண்டும் என்று திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லி செல்லும் முன் நிருபர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும் என்பது தான் இந்தியாவில் உள்ள தொண்டர்களின் விருப்பம். ராகுல்காந்தி இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.
விரைவில் மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டில் நடக்க உள்ளது.
இதுவா அதுவா.. அவரா இவரா.. ஒரே குழப்பமா இருக்கேப்பா.. திமுகவுக்கு புது சவால்!
பாஜக தோல்வி
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். வாஜ்பாயை முன் நிறுத்திய போது பல இடங்களில் பா.ஜ.க. தோல்வியடைந்து உள்ளது. மாநில கட்சிகளும் தோல்வியடைந்து உள்ளன. தேசிய, மாநில கட்சிகள் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணி செய்து வர வேண்டும்.
டெல்லி
ராகுல்காந்தியும் வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் கட்சி தலைமை பணியில் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
ராகுல்காந்தியை சந்தித்த போது தலைவராக தொடர வேண்டும் என்று சொன்னோம். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களை சந்தித்து ராகுல்காந்தி தொடர வேண்டும் என்பதை வலியுறுத்த டெல்லி செல்கிறேன்.
மாணவர்கள்
நீட் தேர்வு குறித்து திமுக-காங்கிரஸ் மீது அதிமுக, அதிமுக-பா.ஜ.க. மீது திமுக மாறி மாறி கடந்த 3 ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர். இந்த முறை நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளன. நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்கள் தேர்வை எழுதிதான் ஆக வேண்டும்.
காங்கிரஸ்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. நீட் தேர்வை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றால் மாணவர்களால் முடியாது. மாணவர்கள் எதிர்காலம் என்ன ஆவது. ஜெயலலிதா மறைவுக்கு பின் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்பட கட்சிகள் வலியுறுத்தி வருகிறோம்.
முயற்சி
தேர்விலிருந்து விலக்கு அளித்தால் நல்லது. மத்திய அரசு கட்டாயமாக தேர்வு நடத்தினால் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற அரசு முயற்சி செய்ய வேண்டும். எந்த தேர்வு எழுதி தோல்வி அடைந்தாலும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.
வெற்றி
தற்கொலை செய்வதால் பெற்றோர், குடும்பத்தினர் ஆகியோருக்கு நீங்காத துயரத்தை ஏற்படுகிறது. தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு. எத்தனை தோல்வியாக இருந்ததாலும் வெற்றி பெற முயற்சி எடுக்க வேண்டும்.
மத்திய அரசு
ட்விட்டரில் எதற்காக முதலமைச்சர் கருத்தை போட்டார். பின்னர் ஏன் நீக்கினார் என்பது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்தி திணிப்பதற்கு தமிழகமே எதிராக இருந்ததால் பணிந்துவிட்டது.
மாநில மொழி
இல்லை என்றால் தமிழகத்தில் போராட்டங்கள் ஏற்படும். 3வது மொழியை விருப்பம் உள்ளவர்கள் படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தமிழர்கள் இல்லாத மாநிலமே இல்லை. பட்டியலில் உள்ள மாநில மொழிகளை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்.
குரல்
நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். நீட் தேர்விற்கு திமுக, காங்கிரஸ் உள்பட எதிராக தான் உள்ளோம். நாடாளுமன்றத்தில் நீட்டிற்கு எதிராக குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.