கருத்துதானே சொன்னார்.. ரஜினியை ஏன் திட்டறீங்க.. அராஜகமாக இல்லையா.. எஸ்.வி.சேகர் கொந்தளிப்பு!
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினி கருத்தை குறை கூறுவது அராஜகமான செயல் எனவும் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்குமானது எனவும் நடிகர் எஸ்.வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
நேதாஜி 124வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியபின் எஸ்.வி சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்களில் முக்கியமானவர். அவரது போர்குணம் எல்லோருக்கும் வர வேண்டும். தந்தை பெரியார் குறித்து இல்லாத ஒன்றை கூறியதாக அனைவரும் நடிகர் ரஜினிகாந்தை குறை கூறுவது அராஜகம். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் சமமான ஒன்று. ஈ.வே.ரா பேசிய காலத்தில் இவ்வளவு தொலைக்காட்சிகள் இல்லை.
அவரது கருத்துகள் குறித்து மறுப்புகள் வரும்போது அது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சுதந்திரமே வேண்டாம் என பெரியார் பேசியதாக கூறப்படுகிறது. வரலாற்றை யாரும் எளிதாக மறைத்துவிட முடியாது.
பாஜக அதிமுக பிளவு குறித்து அமைச்சர் பாஸ்கரன் பேசியதற்கு பதிலளித்த அவர், அமைச்சரின் கருத்து சுதந்திரத்தைப் பற்றி முதலமைச்சரிடம்தான் கேட்க வேண்டும். பாஜக அதிமுக கட்சிகள் இடையே பிளவு ஏற்படாது என்பது உறுதி என்றும் தெரிவித்தார்.
சேலத்தில் நடந்த பெரியார் பேரணி குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. துக்ளக் பத்திரிகையில் போட்டதாக கூறிவிட்டு இன்று அவுட் லுக் பத்திரிகையின் ஆதாரத்தை கொண்டு நேற்று காண்பித்தார் ரஜினிகாந்த். இதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.