எஸ்.ஏ சந்திரசேகர் கட்சி அவ்ளோதானா... தலைவர் ராஜாவின் திடீர் ராஜினாமாவின் பின்னணி
தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் திருச்சி ராஜா ராஜினாமா செய்துள்ளதன் பின்னணியில் புஸ்லி ஆனந்த் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் ஆரம்பித்த கட்சியை 15 நாட்களுக்கு முடித்து வைத்து மங்கலம் பாடி விட்டார் விஜய். தலைவர் கே.ஆர் ராஜாவின் ராஜினாமா அறிவிப்பிற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் புஸ்லி ஆனந்த் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எஸ்.ஏ சந்திரசேகர் கட்சி ஆரம்பித்து தலைவலியோடு திருகுவலியையும் சேர்த்து வாங்கிக்கொண்டார்.
இயக்குநராகவும் பின்னர் நடிகராகவும் வலம் வந்த எஸ் ஏ சந்திர சேகருக்கு தனது மகனை மிகப்பெரிய ஹீரோவாக்க நினைத்தார். பல தோல்விகளுக்குப் பிறகு வெற்றிக்கதாநாயகனாக உருவெடுத்தார் விஜய். அதற்கு முழு முதற்காரணம் எஸ்.ஏ சந்திரசேகர் என்றால் மிகையாகாது.
விஜய்க்கு ரசிகர் மன்றத்தை தொடங்கி அதை மக்கள் இயக்கமாக மாற்றியது வரை அனைத்திலும் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகருக்கு முழு பங்கு உள்ளது.
விஜய் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநில தலைவர் ராஜினாமா
ரசிகர் மன்றம் டூ அரசியல் கட்சி
சினிமாவில் இருக்கும் மகனை அரசியலுக்கு அழைத்து வரவேண்டும் என்று ஆசைப்பட்ட சந்திரசேகர், தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவுச் செய்து அதற்கு மாநில தலைவராக திருச்சியைச் சேர்ந்த பத்மநாபன் என்கிற ஆர்கே ராஜாவை தலைவராக நியமித்தார்.
விஜய் எதிர்ப்பு
எந்த நேரத்தில் கட்சி ஆரம்பித்தாரோ, அன்று முதல் இன்று வரை ஒரே குழப்பம்தான். தனக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று விஜய் கூறியிருந்தார். அப்பாவிற்கு விசுவாசமாக இருக்கும் கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்தார் விஜய்.
தலைவர் ராஜினாமா
விஜய் கட்சி விவகரத்தில் வரும் 20ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் சொல்லியிருந்த நிலையில் அவரது தளபதி மக்கள் இயக்கம் கட்சி தலைவர் ஆர்.கே.ராஜா இன்று தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்
பின்னணி தகவல்
புதுச்சேரி மாநிலத்தின் எம்எல்ஏவாக இருந்த புஸ்லி ஆனந்த், விஜய் மன்றத்தில் சேர்ந்ததுமே அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார் விஜய். இவரைப்போலவே விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து சிறப்பான சமூக பணியாற்றி முக்கியமான நபராக இருந்தவர்தான் ஆர்.கே.ராஜா. திருச்சியை சேர்ந்த இவர் ஆர்.கே. ஆர். ரியல்எஸ்டேட் நடத்தி வருகிறார். விஜய் மன்றத்தின் சார்பில் திருச்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து வந்ததால் ஆர்.கே.ராஜா மீது விஜய்க்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்போது ராஜாவின் ராஜினாமா பின்னணியில் புஸ்லி ஆனந்த் இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
தலைமறைவான ராஜா
ராஜா உடன் சேர்ந்து பணியாற்றிய சுந்தரவடிவேலு என்பவர் கடந்த 2014ம் ஆண்டில் பிரிந்து சென்று, ராஜா மீது நிலமோசடி வழக்கு போட்டார். அந்த வழக்கைத்தான் இப்போது தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள். பல்வேறு வழக்குகள் தன்மீது பதியப்பட்டுள்ள நிலையில் ராஜா தலைமறைவானார்.
அரசியல் பயணம் முடிந்ததா
தனிப்படைகள் அமைத்து தமிழகம் முழுவதிலும் ராஜாவை தேடி வந்தது போலீஸ். ராஜாவின் குடும்பத்தினருக்கும் போலீஸ் தரப்பில் இருந்து மிரட்டல் வரவே வேறு வழியின்றி தனது கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் ராஜா என்கின்றனர். ராஜாவின் ராஜினாமா எஸ்ஏசிக்கு அதிர்ச்சியான விசயம்தான்.
கட்சியை கலைத்து விடுவாரா?
எஸ்.ஏ சந்திரசேகர் கட்சி ஆரம்பித்து தலைவலியோடு திருகுவலியையும் சேர்த்து வாங்கிக்கொண்டார். மகனை முதல்வராக்கி அழகு பார்க்க நினைத்த அப்பாவிற்கு ஒரே ஆறுதல் சினிமாவில் முதல்வராக நடிப்பதுதான். அது சரி கட்சித்தலைவரே ராஜினாமா செய்த பின்னர் கட்சிக்கு வேறு யாரையாவது நியமிப்பாரா? அல்லது கட்சியை கலைத்து விடுவாரா? 20ஆம் தேதி வெளியிடும் அறிவிப்பில் தெரியவரும்.