விஜய்க்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு வருகிறது ஏன் தெரியுமா? ஏர்போர்ட்டில் கொதித்த எஸ்.ஏ.சந்திரசேகர்
சென்னை: விஜய்க்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு வருகிறது என்றால், அவர் வளர்கிறார் என்றுதான் அர்த்தம் என அவரது தந்தையும், இயக்குநருமான, எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
பிகில்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய விஜய், "பேனர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மேல பழி போடுவது என்று தெரியாமல் லாரி டிரைவர் மேலேயும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகிறார்கள்" என்றும், யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்" என்றும் விஜய் பேசினார்.
விஜய் பேச்சுக்கு, அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விஜய் பேச்சுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, விஜய்யின் தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி ஏர்போர்ட் வந்திருந்தார்.
அங்கு நிருபர்கள் அவரிடம், விஜய் சந்தித்து வரும் விமர்சனங்கள் குறித்து கேள்விகளை முன்வைத்தனர். இதற்கு, அவர் அளித்த பதில்: சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பேனர் விழுந்து விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.
அனைவரும் பேசிவரும் ஒரு விஷயத்தைப் பற்றிதான் விஜய் பேசினார். நீதிமன்றமே சுபஸ்ரீயின் விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை எனக் கேள்வி கேட்டுள்ளதே.
ஆனால், விஜய் பேசிய கருத்துக்கு மட்டும் அமைச்சர்களும், அதிமுகவினரும், ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. விஜய்க்கு இவ்வளவு எதிர்ப்பு வருகிறது என்றால் அவர் வளர்கிறார் என்று அர்த்தம். நீங்கள் பேசினால், இவ்வளவு எதிர்ப்பு வருமா, இல்லைதானே? விஜய் பேசினால் எதிர்ப்பு வருகிறது என்றால் அவர் வளர்கிறார் என்று அர்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விஜய் மேடைப்பேச்சுக்களை வைத்து பார்த்தால், அவர் அரசியலுக்கு வரப்போவது உறுதியா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, "எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை" என்று தெரிவித்தார், எஸ்.ஏ.சந்திரசேகர்.
இதுபற்றி அதிமுக தரப்பினரிடம் கேட்டோம். அவர்கள் கூறுகையில், "சுபஸ்ரீ பேனர் விழுந்து பலியானது துரதிருஷ்டவசமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதுகுறித்து, உடனே கருத்து சொல்லாத, விஜய், பிகில் பட இசை வெளியீட்டு விழாவரை காத்திருந்தது ஏன்? விஜய் நடித்த, திரைப்படம் ஒன்றிற்கு கட்அவுட் வைத்த ரசிகர், மேலேயிருந்து கீழே விழுந்து இறந்தார். அந்த வீடியோ கூட வெளியானது. ஆனால், இவர் தனது படங்களுக்கு கட்அவுட் வைக்க வேண்டாம் என்று அப்போதே கூறியிருக்க வேண்டும்" என்று ஆவேசமாகிறார்கள்.