எந்த அப்பா, எந்த மகன்.. ஊரும் இல்லாமல், பேரும் இல்லாமல் ஒரு கண்டனமா.. ரஜினிக்கு பொதுமக்கள் கேள்வி!
ஊர், பேர் இல்லாமல் கண்டனம் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்
சென்னை: இப்படி ஒரு கண்டனத்தை ரஜினி தெரிவிக்காமலேயே இருந்திருக்கலாம்.. 2 உயிர்கள் படுமோசமாக மரணமடைந்ததற்கு, நாசூக்காக ஒரு கண்டனத்தை இவர் தெரிவித்தது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
சாத்தான்குளம் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.. தமிழகம் முதல் இந்தியா வரை கொந்தளித்து முடித்துவிட்டார்கள்.. அப்போதே ரஜினிகாந்த் வந்து இன்று சொன்ன வார்த்தையை சொல்லி இருக்க வேண்டும்.. ஆனால் ரஜினியோட ரியாக்ஷனே ரொம்ப லேட்.
எதற்காக இவ்வளவு நாட்கள் எடுத்து கொண்டார் என்று காரணம் தெரியவில்லை. ஒரு வேளை என்ன நடந்தது என்று தனது தரப்பு ஆட்கள் மூலம் விசாரித்திருப்பார் போல. ஆனால் கைப் புண்ணுக்கு எதுக்கு கண்ணாடி என்ற கதைதான் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
சாத்தான்குளம்- முருகண்ணே..அண்ணிக்கு வருத்தமா இருக்காது?பாஜக தலைவருக்கு திமுக எம்.எல்.ஏ. மனைவி கேள்வி
கண்டனம்
எல்லாவற்றிலும் தாமதமாக கருத்து சொல்பவர் என்ற பெயர் அவருக்கு எற்கனவே உள்ளது. இப்போதும் லேட்டாகவே வந்து கண்டித்துள்ளார். எனினும் அதை வரவேற்கலாம். காரணம் மிகக் கடுமையான கண்டனத்தை அவர் பதிவு செய்துள்ளமைக்காக.
தந்தை-மகன்
அதேசமயம், இந்த கண்டனத்தை யாருக்கு சொல்கிறார் என்று வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதிலும் ஒரு பூசி மெழுகலே காணப்படுகிரது. முக்கியமாக சாத்தான்குளம் என்ற வார்த்தையே இல்லை.. அதேபோல, எந்த தந்தை, எந்த மகனை சொல்கிறார் என்பதையும் குறிப்பிடவில்லை. தந்தை-மகனுக்குதான் பெயர்கள் உள்ளதே.. அந்த பெயரில் ஏன் கண்டனம் வெளியாகவில்லை? ஏன் இதை அடையாளப்படுத்தவில்லை என்றும் தெரியவில்லை.
இரங்கல்
சுருக்கமாக சொன்னால், ஊரும் இல்லை.. பேரும் இல்லை.. ஆனால், ஒரு ஹேஷ்டேகையும் புதிதாக அவரே உருவாக்கி தந்துவிட்டு போயுள்ளார்.. எதிர்பார்த்தது போல அவரது கருத்தும் வைரலாகி விட்டது.. ரசிகர்கள் கொண்டாடித் தீர்து வருகின்றனர். ரஜினி சொன்னது ஒரு துக்க சம்பவத்துக்கான இரங்கல்.. ஆனால் அவரது புதுப் படம் ரிலீஸானது போல ரசிகர்கள் உற்சாகமாக காணப்படுகின்றனர்.
அறிக்கை
பால் முகவர்கள் சங்க தலைவரே, முதல்வரை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்று துணிச்சலாக அறிக்கை விடுகிறார். ஆனால் ரஜினியோ பெயரே குறிப்பிடாமல் மொட்டையாக ஒரு கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். குறைந்தபட்சம் முதல்வரிடம் ரஜினிகாந்த் இதுசம்பந்தமாக எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. காரணம் நிச்சயம் முதல்வரும் பரிசீலிப்பார். ரஜினி மீது முதல்வருக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஏதாவது ஒரு மன திருப்தி ஏற்பட அது உதவியிருக்கும்.
உணர்ச்சிகள்
ரத்தம் சூடேற, உணர்வுகள் கொப்பளிக்க, ஆவேசத்துடனும், உணர்ச்சிகரமான கருத்தையும் மட்டும் வெளிப்படுத்துவது கண்டனமாக இருக்காது.. அது ஒரு கண்துடைப்பாகவே இருக்கும்!