"ஈரக்குலை நடுங்குது.. சாத்தான்கள் தண்டிக்கப்பட வேண்டும்".. எஸ்ஏசி ஆவேசம்.. விஜய் என்ன நினைக்கிறார்?
இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்
சென்னை: விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்? ஏன் சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஒரு கருத்து கூட சொல்லவில்லை என்பது கேள்வியாக எழுந்து வருகிறது... இந்நிலையில், "சம்பவத்தை நினைத்தால், ஈரக்குலை நடுங்குகிறது... காவல்துறையில் இப்படிப்பட்ட கொடுமையா? இந்த சாத்தான்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்" என்று விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ்ஏசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் விவகாரத்தில், அனைவரும் தங்கள் கருத்துக்களையும், ஆதகங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று முதல்வர் அறிக்கை வெளியிட்டிருந்தாலும், இதை யாராலும் ஏற்க முடியவில்லை.
வேறும் பணமும், வேலையும் 2 உயிருக்கு ஈடாகாது என்றும், நடந்த சம்பவத்துக்கு இன்னும் தீவிரம் தேவை என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன... மற்றொரு பக்கம் வழக்கு, விசாரணை, சாட்சியங்களும், அதையொட்டி கைது நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.
தண்ணீர் கேட்டு துடித்த ஜெயராஜ்.. ரத்தம் வடிய அடித்தனர்.. சாத்தான்குளம் பெண் கான்ஸ்டபிள் கணவர் பேட்டி
எஸ்ஏசி
இந்த சமயத்தில்தான் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு வீடியோ வெளியிட்டு கண்டனம் சொல்லி உள்ளார்.. அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "இந்த கொரோனா ஒரு பயங்கரமான கொடிய வைரஸ் என்கிறார்கள்...அதில் மாட்டிக் கொண்டவர்கள் கூட பலர் உயிருடன் திரும்பி வந்துவிடுகிறார்கள்... ஆனால், இந்த சாத்தான்குளம் சம்பவத்தை கேள்விப்படும்போது, இப்படிப்பட்ட காவல்துறையினரிடம் மாட்டினால் என்னாவது என்று நினைக்கும்போதே ஈரக்குலை நடுங்குகிறது.
சாத்தான்கள்
இந்த கொரோனா காலத்தில் எத்தனை காவல்துறையினர் கடவுளின் பிரதிநிதிகளாக வேலை செய்தார்கள். அதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் கூடாது. அப்படிப்பட்ட காவல்துறையில் இப்படிப்பட்ட கொடுமையா? இந்தச் சாத்தான்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதுவும் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களைக் காப்பாற்ற நினைக்கிற யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மெரினா
எஸ்ஏசி சொன்ன இந்த வார்த்தைகள் அனைத்தும் ஏற்கக்கூடியதே.. நியாயம் மிகுந்ததே.. அதேசமயம், விஜய் ஏன் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கிறார் என தெரியவில்லை.. தமிழகத்தை சூடாக்கிய மிக முக்கிய சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் விஜய்.. தகித்து கிடந்த அந்த களங்களுக்கு இடங்களுக்கெல்லாம் ஆரவாரமின்றி, ஆர்ப்பாட்டமின்றி, களேபரமின்றி தன் இருப்பையும் தன்மான உணர்வினையும் தொடர்ந்து பதிவு செய்து வந்தார்.
நிதியுதவி
விடிகாலை 5.30 மணிக்கு கர்சீப்பை கட்டிக் கொண்டு மெரினா போராட்டத்துக்கு சென்றதாகட்டும், தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்ல சென்றதாகட்டும் விஜய் தன் பங்கை செலுத்தினார்.. தூத்துக்குடி போராட்டத்தின்போது, சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்திலும், அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடி டோல்கேட் வரை வந்து, அதன்பின்பு ஒரு பைக்கில் ஏறி உட்கார்ந்து, முகத்தை கர்ச்சீப்பால் மூடியபடி, வாயில் துப்பாக்கியால் சுடப்பட்டு கோரமாக கொல்லப்பட்ட இளம் பெண் ஸ்னோலின், ஜான்சி, கிளாட்சன் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் சொல்லி, நிதியுதவியும் வழங்கிய விஜய்யை தமிழகம் மறக்காது!
விஜய்
தன் மீதான சில முத்திரைகளை உடைக்கும் வகையிலும், தனது எதிரிகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் விஜய்யின் சில பேச்சுக்கள் கடந்த காலங்களில் இருந்ததையும் மறுக்க முடியாது... இப்படிப்பட்ட விஜய் இன்று ஏன் அமைதியாக இருக்கிறார்? ஆனால் அவர் முக்கிய பிரச்சினைகளில் கருத்து சொன்னால் அதன் பின் விளைவையும் அவர் சந்திக்க வேண்டி வந்துள்ளது. அதை தமிழகமே பார்த்தும் உள்ளது.
விளக்க வேண்டும்
எனவேதான் இந்த விஷயத்தில் விஜய் அமைதி காக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் எஸ்.ஏ.சியின் கருத்தே விஜய்யின் கருத்தாகவும் இருக்கக் கூடும் என்று தெரிகிறது. காரணம், தனது மனதில் உள்ளதை தனது தந்தையின் மூலமாக விஜய் வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. எஸ்.ஏ.சி. சொன்ன கருத்தையே விஜய் கருத்தாகவும் நாம் எடுத்து கொள்ளலாமா?.. அவர்தான் விளக்க வேண்டும்!!